கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதைத் தொடர்ந்து, மாகாணம் முழுமைக்கும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை வெளியேற்றப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் எப்போது வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலைமையும் உருவாகியுள்ளது.
தொடர்ந்து உள்ளூர் அலுவலர்கள் அவசர நிலை பிறப்பிக்குமாறு வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு பெருமளவில் மக்களை விரைவாக வெளியேற்றுவதற்கு உதவியாக இருக்கும் என்றும், தேவையானால், அவர்களுக்கு தங்கும் இடம் முதலான ஏற்பாடுகளை அரசு செய்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் Mike Farnworth தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுவதும் சுமார் 300 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் பல இடங்களில் வாழும் மக்களுக்கு வெளியேற ஆயத்தமாக இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில், அவசர நிலை 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என்றும், தேவையானால் அது நீட்டிக்கப்படக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.