விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய அணிக்கான அற்புதமான கண்டுபிடிப்பு என இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் டோனி உலகக் கிண்ண தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் இடத்தைப் பிடிக்க தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் டோனி இருக்க வேண்டும் என்றும், ரிஷப் பண்ட் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு என்றும் இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘ரிஷப் பண்ட் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு. இளம் வீரராக இருந்தாலும் அல்லது வயது மூத்த வீரராக இருந்தாலும் அவர்களது இடத்திற்காக போட்டியிடுவது சிறந்தது.
அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது தான் முக்கியம். அதை வாய்ப்பு அல்லது மிரட்டல் என்றும் எடுத்துக் கொள்ளலாம். உலகக் கோப்பை என்று வரும்போது அனுபவ வீரர்கள் அதிக அளவில் இருப்பார்கள்.
உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் டோனிக்கு கட்டாயம் இடமிருக்கும். இக்கட்டான நிலையில் விராட் கோஹ்லி, டோனியுடன் அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட முடியும்’ என தெரிவித்துள்ளார்.