நேற்று (9.8.2021, திங்கட்கிழமை) நள்ளிரவு, அமெரிக்காவுடனான கனடாவின் எல்லைகள் திறக்கப்பட்டதும், கனடாவுக்குள் முதல் ஆளாக ஓடோடி வந்தவர்களில் Gina Chircoவும் ஒருவர்.
அமெரிக்காவின் மிச்சிகனில் வாழும் Ginaவும், ஒன்ராறியோவில் வாழும் அவரது காதலரான Tony Faneliயும், இரண்டாண்டுகளாக தங்கள் திருமணத்துக்காக காத்திருக்கிறார்கள்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களது திருமணம் தள்ளிக்கொண்டே போன நிலையில், கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டபின், தங்கள் குடும்பத்தினர் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்துகொள்வதற்காக காத்திருந்தார்கள் அவர்கள்.
அது மட்டுமில்லை, டிசம்பர் மாதம் Ginaவின் தாய் இறந்துபோனார்கள். தாய் இறந்தபோது தன்னவர் தன்னருகே இல்லை என்ற சோகம் Ginaவுக்கு. தனக்கன்பானவளின் தாய் இறந்தபோது, பக்கத்தில் ஆறுதலாக நிற்க தன்னால் இயலவில்லையே என்ற சோகம் Tonyக்கு…
ஆக, இப்போது துக்கமான ஒரு சம்பவத்துக்கு பிறகு, குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுக்காக இரு குடும்பத்தினரும் இணைந்துள்ளனர்.
கனடா, முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்களுக்கு எல்லையை திறந்துவிட்டதாலேயே இது சாத்தியமாகியுள்ளது.
இப்போது அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழையும் முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் மற்றும் வாழிட உரிமம் கொண்டவர்களுக்கு மட்டும் கனடாவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கனடாவுக்குள் நுழைந்ததும் அவர்களுக்கு இனி தனிமைப்படுத்துதல் கிடையாது. ஆனால், அவர்கள் பயணம் புறப்படுவதற்கு முன் 72 மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.