
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
இரா. சம்பந்தன் வயது மூப்பு காரணமான, உடல் நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடியவர் இரா. சம்பந்தன். இவர் இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவராகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகவும் இருந்தார். மேலும், பல ஆண்டுகள் எம்.பி-யாகவும் இருந்த அவர், 2015 முதல் 2018ஆம் ஆண்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன் அவையில் துணிச்சலான மற்றும் இடைவிடாது குரல் கொடுத்தவர். 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, அவர் ‘ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத’ நாட்டிற்குள் தமிழர்களுக்கு சம உரிமைகளை அயராது கோரினார். வழக்கறிஞராக பயிற்சி பெற்ற அவர், இலங்கையின் அரசியலமைப்பு வரலாறு மற்றும் தென்னிலங்கை சிங்கள ஸ்தாபனம் கடந்த காலத்தில் வழங்கிய ஆனால் நிறைவேற்றத் தவறிய பல வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வுக்கான தனது வாதங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தனின் பூதவுடல் இன்று (4) காலை மார்டின் வீதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து தந்தை செல்வா அரங்கத்திற்கு எடுத்து வரப்பட்டது.
இந்தநிலையில், இராஜவரோதயம் சம்பந்தனது புகழுடல் நாளை (5) காலை 6 மணியளவில் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்து செல்லப்பட்டு 9:30 மணிமுதல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்படும்.
இதைனையடுத்து ஞாயிற்றுகிழமை அன்னாரது இல்லத்தில் மதியம் இறுதி கிரியை இடம்பெற்று உடல் தகனம் செய்யப்படும்.