கனேடிய தயாரிப்பு கொரோனா தடுப்பூசிக்கு முதல் கட்ட மருத்துவ சோதனை மேற்கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை மொத்தமாக ஒழிப்பதன் நோக்கில் நோவா ஸ்கோடியா மக்கள் ஆர்வமாக தடுப்பூசி எடுத்துக் கொள்வதால், தற்போது கனேடிய தயாரிப்பான கொரோனா தடுப்பூசிக்கு முதல் கட்ட மருத்துவ சோதனையை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
18ல் இருந்து 55 வயதுக்கு உட்பட்ட தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத தன்னார்வலர்கள் தேவை என குறிப்பிட்டுள்ள கனடாவுக்கான தடுப்பூசி மைய இயக்குனர் Dr. Scott Halperin,
கொரோனா பாதிப்பு இதுவரை ஏற்படாதவர்களும் முன்வரலாம் என குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குள் தன்னார்வலர்களை கண்டறிய முடியாவிட்டால், மருத்துவ சோதனைகளை வேறு நாட்டுக்கு மாற்ற நேரிடும் என தடுப்பூசி தயாரிப்பு நிறுவன CEO John Lewis தெரிவித்துள்ளார்.
இதே நிலை நீடித்தால் இரண்டாவது கட்ட மருத்துவ சோதனையானது கனடாவுக்கு வெளியே முன்னெடுக்கப்படும் என்றார். இரண்டாவது கட்ட சோதனைக்கு குறைந்தபட்சம் 600 பேர்கள் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளுக்கு கனேடிய தடுப்பூசியை கொண்டு செல்லும் திட்டத்திற்கு உதவும் வகையில் பங்களிப்பு செய்ய விரும்பும் சில இளைஞர்கள் ஹாலிஃபாக்ஸ் பகுதியில் இருக்கிறார்கள் என்று இன்னும் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.