ரொறன்ரோவில் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில், கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பம் குறித்து தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இரவு 7.21 அளவில், நெடுஞ்சாலை 404ற்கு கிழக்கே, விக்டோரியா பார்க் அவனியூ மற்றும் வான் ஹோர்ன் அவனியூ பகுதியில் உள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் உள்ள வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில், பணம் எடுக்க சென்ற பெண்ணிடம் பின்புறமாக வந்து கழுத்தில் கத்தியை வைத்த ஆண் ஒருவர், பணத்தை தருமாறு மிரட்டியதாகவும், பணத்தைப் பெற்றுக்கொண்ட கொள்ளையர் வெளியே காத்திருந்த கார் ஒன்றில் ஏறித் தப்பிச் சென்றதாகவும், பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்களின் பின்னர் அதே இடத்தில் மாலை ஆறு மணியளவில், அதே பாணியில் பெண் ஒருவரிடம் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் முகத்தை மறைத்தவாறே கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், கொள்ளையரை கைதுசெய்ய பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.