தவக்காலம் இன்றைய தினம்(புதன்கிழமை) திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாகியுள்ளது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர் 40 நாட்களை தவக்காலமாக அனுஸ்டிக்கின்றோம்.
தவக்காலம் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனோடு ஆரம்பமாவதுடன் சாம்பல் புதன் நாளில் ஆலயங்களில் இறைமக்களின் நெற்றியில் அருட்பணியாளர்கள் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலால் சிலுவை அடையாளம் பூசுவர்.
அதனைத்தொடர்ந்து சிறப்புத் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து வரும் நாட்களில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் வெள்ளிக்கிழமை தோறும் ஆலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடத்தப்படுவதுடன் வீடுகளிலும் தவக்கால பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து ஜெபம், தவம், தர்மம், விரதம் போன்றவைகளை கடைப்பிடிக்கின்றனர்.
மனம் வருந்துதல், மனமாற்றம், மன்னிப்பு ஆகியவை வழியாக கிறிஸ்தவர்கள் தங்கள் முகங்களையும் இதயங்களையும் புதுப்பிப்பதற்கு தவக்காலம் வலியுறுத்துகின்றது. இதில் அனைத்துப் படைப்புக்களை ஈடுபடுத்தவும் அழைப்பு விடுக்கின்றது
நாம்தொடங்கியிருக்கும் தவக்காலம் மேன்மை தரும் மாற்றங்களை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக்கும் வசந்தகாலமாக மாற இறைவனை வேண்டுவோம்.
இந்த மாற்றங்கள் நமக்குள் நிகழவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு உள்ளிட்ட சோதனையை வெல்வதற்கு இறையருள் வேண்டி மன்றாடுவோம்.