சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
பல மாத ஆராய்ச்சிக்கு பின் இந்த கொரோனா வைரசுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. பைசர், மாடர்னா, ஸ்புட்னிக் – வி, அஸ்டரா ஜெனகா உள்ளிட்ட தடுப்பூசிகள் வைரசை தடுப்பதில் பெரும் பங்காற்றுவது ஆய்வில் தெரியவந்தது.
குறிப்பாக பைசர், மாடர்னா தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிக பலன் அளித்ததால் அந்த தடுப்பூசிகளை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.
இதனால், இத்துடன் கொரோனா வைரசின் தாக்கமும், அதனால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளும் நின்று இந்த பெருந்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உலக மக்கள் நிம்மதி பெரும்மூச்சுவிட்ட நிலையில் இங்கிலாந்தில் இருந்து பெரும் அதிர்ச்சி தரும் செய்தி வந்தது.
அதுதான் இந்த கொரோனா வைரஸ் புதிய வகைக்கு மாறியுள்ளது என்ற தகவல். இந்த புதியவகை கொரோனா வைரஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
புதிய வகை கொரோனா
* இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துவந்தது. அதற்கான காரணத்தை கண்டறியும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவந்தனர். அப்போதுதான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவைரசின் தன்மையை விட தற்போதுள்ள கொரோனா வைரசின் தன்மைகள் மாற்றமடைந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
* பொதுவாக வைரஸ் வளர்சிதை மாற்றம் அடைந்து தனது தன்மையை மாற்றிக்கொண்டே இருக்கும். ஆனால், அந்த மாற்றம் பெரும்பாலும் சிறிய அளவில் தான் இருக்கும். அந்த மாற்றங்களால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
* அதேபோன்று இந்த கொரோனா வைரஸ் இதுவரை 4 ஆயிரத்திற்கு அதிகமான முறை வளர்சிதை மாற்றமடைந்து தனது தன்மையை மாற்றி தகவமைத்துக்கொண்டுள்ளது. வைரஸ் மனித உடலில் தன்னை தகவமைத்துக்கொள்வதை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
* அதேபோன்றுதான் தற்போது வைரஸ் வளர்சிதை மாற்றமடைந்து தன்னை தகவமைத்துள்ளது. தற்போது வைரஸ் பெற்றுள்ள வளர்சிதை மாற்றத்திற்கு விஞ்ஞானிகள் N501Y என பெயரிட்டுள்ளனர்.
* இந்த உருமாற்றம் வைரஸ் இதற்கு முந்தைய நிலையை விட மனித உடலில் உள்ள செல்களில் சுலபமாக இணைந்துகொள்கிறது. வைரசின் புரத அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றமே இந்த தகவமைப்பு மாற்றத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த புரத அமைப்பின் வளர்ச்சியால் ஏற்பட்ட தகவமைப்புகள் மனித செல்களுடன் சுலமாக இணைந்து கொள்கிறது.
* தற்போது வளர்சிதை மாற்றமடைந்துள்ள வைரஸ் முந்தைய வைரசை விட 70 சதவிகிதம் வேகமாக பரவும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் 60 வெவ்வெறு இடங்களில் 1,000 -க்கும் அதிகமானோருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
* இந்த புதிய வைரஸ் வேகமாக பரவும் என உறுதியாகியுள்ள போதும் இந்த வைரசால் பழைய வைரசை விட அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது என்ற தகவலை உறுதிபடுத்து இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
* இதன் மூலம் இந்த கொரோனா வைரசும் பழைய அறிகுறிகளுடனேயே இருக்கும் என தெரியவந்துள்ளது. ஆனால், இந்த வைரஸ் பரவும் வேகம் மிக அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
* மனித உடலில் தொடர்ந்து பரவவும், நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி போன்றவற்றால் அழிந்துவிடாமல் தன்னை காப்பாற்றிக்கொள்ளவே கொரோனா வைரஸ் தனது தன்மையை தொடர்ந்து மாற்றிக்கொள்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
* இந்த தகவமைப்பு மனித உடலில் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க முயற்சிக்கும் எனவும், புதிய வகை வைரசுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடல் உருவாக்க தாமதத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கும் என விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.
* இதற்கிடையில், இந்த வளர்சிதை மாற்றமடைந்த புதியவகை கொரோனா இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த வைரஸ் ஏற்கனவே வேறு நாடுகளில் பரவி இருக்கலாம் எனவும் இங்கிலாந்தில் மருத்துவத்துறையில் உள்ள நவீன ஆராய்ச்சி நடைமுறைகளால் வைரசின் வளர்சிதை மாற்றம் தொடர்பான தகவல்கள் தெரியவந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
* எனென்றால், இந்த புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் பரவும் தகவல் கடந்த 12-ம் தேதி தெரியவந்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலானோருக்கு இதே வளர்சிதை மாற்றமடைந்த கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் மாதமே பரவியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
தடுப்பூசி:-
* கொரோனா வைரஸ் தனது தகவமைப்பை மாற்றிக்கொண்டு வேகமாக பரவி வரும் போதும் தற்போது பயன்பாட்டில் உள்ள பைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் இந்த புதியவகை வைரசையும் கட்டுப்படுத்தும் என தெரியவந்துள்ளது.
* ஸ்புட்னிக் வி தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசிகளும் தற்போதுள்ள புதியவகை கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கொரோனா வேகமாக பரவும் வகையில் வளர்சிதை மாற்றமடைந்துள்ளபோதும் தற்போதுள்ள தடுப்புசிகள் வைரசை கட்டுப்படுத்தும் என்ற தகவல் உலக மக்களுக்கு மிகுந்த ஆறுதல்
அளிக்கும் வகையில் இருந்தாலும் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே வைரசின் மாற்றம் நமக்கு நினைவு படுத்துகிறது.