ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இப்போட்டி துவங்க உள்ளது. இரு அணிகளுமே இத்தொடரில் இதுவரை தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சின் ஆண்ட்ரே ரசல், அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 49 ரன்களை விளாசினார். வெற்றிக்கு இதுவே திருப்பு முனையாக அமைந்தது.
அணியின் ஓபனர் நிதிஷ் ராணாவும் சிறப்பாக ஆடினார். தவிர கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் என கொல்கத்தா அணியின் பேட்ஸ்மென்கள், பஞ்சாப் பவுலர்களுக்கு கடும் சவாலாக விளங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
கொல்கத்தா அணியின் பவுலர்களில் பியூஷ் சாவ்லாவும், பெர்கூசனும் சற்று நம்பிக்கை தருகின்றனர். முதல் போட்டியில் இந்த அணியின் அனைத்து பவுலர்களுமே சராசரியாக ஓவருக்கு 8 ரன்களும்இ அதற்கு மேலும் விட்டுக் கொடுத்துள்ளனர்.
பஞ்சாப் அணியிலும் மிரட்டல் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இடம் பெற்றுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கெய்ல் 47 பந்துகளில் 79 ரன்களை குவித்தார்.
தவிர லோகேஷ் ராகுல், மயாங்க் அகர்வால், சர்பிராஸ் கான் என டாப்-ஆர்டர் பேட்ஸ்மென்கள் நம்பிக்கை தருகின்றனர். கேப்டன் அஸ்வின் தலைமையில் மொகமது ஷமி, சாம் கரன் என பந்து வீச்சும் பலமாகவே உள்ளது.
ஆனால் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் ஜாஸ் பட்லரை சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் செய்தததால், அணியின் கேப்டன் அஸ்வின், கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். அதில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை என்றே கூற வேண்டும்.
இப்போட்டியில் 4 சிக்சர்களை விளாசினால், ஐபிஎல்லில் முதன் முதலாக 300 சிக்சர்கள் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் எட்டுவார் என்பதால், பஞ்சாப் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.