கனடாவின் நயகரா பிராந்தியத்தில் சூரிய கிரகணம் காரணமாக அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.இந்த அரிய சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த பூரண சூரிய கிரகணம் கனடாவின் நயகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் தெளிவாக தென்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நயகரா நோக்கிப் வருகை தர தொடங்கியுள்ளனர்.
எனவே பிராந்திய வலயத்தில் வாழ்ந்து வரும் மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகளை பாதுகாத்துக் கொள்ளவும் மக்களை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயகராவிற்கு சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்காக சுமார் ஒரு மில்லியன் மக்கள் நயகரா நோக்கி வருகைத் தரக்கூடும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சூரிய கிரகணத்தை பார்வையிட வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக ஒரு இரவு தங்குவதற்கான ஹோட்டல் அறைக் கட்டணங்கள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.