![](https://paarvaionline.com/wp-content/uploads/2020/12/6-4-HOR-Thusesh-va-1024x683.jpg)
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி (26.12.2020) சனிதேவர் துவாதசி திதியில் சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது சனிக்கிழமையன்று தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
தர்மத்தை தலையாய கடமை என நினைத்து, சுயநலம் பார்க்காமல் செயல்படும் தனுசு ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தன, குடும்ப ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்கிறார். சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.
வாகனப் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு ஒரு பங்கு மேலும் அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சிறப்பு பயிற்சி வகுப்புகள் சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்து கொண்டிருந்த உத்தியோகம் தொடர்பான உதவிகள் சிறப்பாக அமையும்.
மாணவர்களுக்கு :
அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பார்கள். விளையாட்டு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவர்கள் பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். விரும்பிய இடத்தில் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு ஏற்படும்.
பெண்களுக்கு :
திருமணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த பெண்களுக்கு மனதிற்கு பிடித்த இடத்தில் திருமணம் கைகூடும். சிறு, குறு தொழில்கள் மேற்கொள்ளும் பெண்கள் தங்களது தொழிலில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நன்று. தாய்வழி உறவுகளிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும்.
வியாபாரிகளுக்கு :
சுயதொழில் மேற்கொள்ளும் நண்பர்கள் தங்களது தொழிலில் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். சேமிப்புகளை சுப விரயமாக மாற்றுவீர்கள். வியாபாரம் சார்ந்த தொலைதூர பயணங்கள் நற்பலனை தரும். தொழில்நுட்ப ஆலோசனைகளின் மூலம் தொழிலில் மேன்மை அடைவீர்கள். தங்களுக்கு கீழ் பணிபுரியும் வேலையாட்களுடன் சற்று பொறுமையை கடைபிடிப்பது அவசியம்.
அரசியல்வாதிகளுக்கு :
வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பலனை பெறுவீர்கள். தலைமை அதிகாரிகளிடம் நெருக்கமான சூழல் ஏற்படும். கட்சி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வங்கிக் கடன்கள் சாதகமாக அமையும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். இளைய சகோதர வர்க்கத்தினர் முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்கள் பிரதிபலன் பார்க்காமல் உழைக்க வேண்டியது இருக்கும்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர வேற்றுமை நீங்கி ஒற்றுமை மேம்படும்.