டெல்லி: நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் எனது தலைமையிலான அரசு 100 சதவீதத்திற்கும் மேலாக உழைத்துள்ளது என மக்களவையின் கடைசி அலுவல் நாளில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நடப்பு மக்களவையின் கடைசி அலுவல் நாளான இன்று பேசிய பிரதமர், அடுத்த முறை இங்கு மீண்டும் வருவேனா மாட்டேனா என்பது தெரியாது. அது மக்கள் மற்றும் கடவுளின் கையில் உள்ளது என்றார். நாடாளுமன்றத்தின் அமைப்பு மற்றும் செயல்முறைகள் குறித்து எதுவுமே தெரியாமல் ஒரு புதுமுகமாக தான் இங்கு கடந்த 2014-ல் காலடி எடுத்து வைத்ததாக கூறினார். டிஜிட்டல் பாதையில் இந்தியா பயணிப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய பிரதமர், தமது தலைமையிலான அரசு மதிப்பிற்குரிய அரசு என பெயர் வாங்கியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மேக் இன் இந்தியா திட்டம் பலனளித்து வருகிறது. மேலும் வங்கதேசம் – இந்தியா இடையிலான நிலப்பிரச்சனையை தீர்த்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் இடர்பாடுகளில் சிக்கிய அண்டை நாடுகளுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளோம்.
ஐ.நா அவையில் இந்தியாவின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் யோகாவை இந்த அரசு பிரபலப்படுத்தியுள்ளது என்றார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவாகியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 5 லட்சம் கோடி டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தான் அதிக அளவு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்றார். பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறையில் அமைச்சர்களாக பெண்கள் இருந்தது பெருமைக்குரிய விஷயம் என்றார்.