கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை நாளை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த அறிக்கை, 10 வருட காலத்தை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் 144ஆவது நாளாக இன்று (13) அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், மனித புதைக்குழியிலிருந்து இதுவரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது.
இன்றைய தினம் அகழ்வுப் பணிகளின்போது சுமார் 40ற்கும் மேற்பட்ட பொலிஸார் பயிற்சி பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு வருகை தந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.