சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

இளம் வயது காத்தவராயனின் (தனுஷ்) பெற்றோர்கள் சிறு வயதில் சந்தைக்கு போயிட்டு வருகிறோம் என சொல்லிவிட்டு செல்கின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. திரும்பி வரவே இல்லை. தெரிந்த சாமியாரிடம் இரண்டு தம்பி மற்றும் ஒரு தங்கையுடன் அடைக்கலம் அடைகிறார். ஆனால், பெண் குழந்தையை விற்று பணம் பார்க்க அந்த சாமியார் நினைக்க அவரை போட்டுத் தள்ளிவிட்டு செல்வராகவனின் சரக்கு வண்டியில் ஏறி சென்னைக்கு வந்து விடுகிறார். மூத்த தம்பி சந்தீப் கிஷன் குடிகாரன், தூங்குமூஞ்சி, உதவாக்கரை அவருக்கு ஒரு காதலி அபர்ணா பாலமுரளி. 2வது தம்பி காளிதாஸ் ஜெயராம் கல்லூரியில் தேர்தலில் நிற்கிறார் அங்கே அவருக்கும் பிரச்சனை. 3வது தங்கை துர்காவுக்கு (துஷாரா விஜயன்) திருமணம் செய்து பார்க்க ஆசைப்படுகிறார்.
இதற்கு இடையே துரை (சரவணன்), சேது (எஸ்.ஜே. சூர்யா) இடையே கேங் வார் ஏற்படுத்தி தனது பழிவாங்கும் படலத்தை போலீஸ் அதிகாரியான பிரகாஷ் ராஜ் சைலன்ட்டாக செய்கிறார். தம்பிக்காக துரையை போட்டுத் தள்ளும் தனுஷ் சேதுவிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள இறுதியில் என்ன ஆனது என்பது தான் இந்த ராயன் படத்தின் கதை.

தனுஷ் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் நம்மை வியக்க செய்துவிட்டார். படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரும் திரைக்கதையில் எந்த ஒரு தொய்வும் இல்லை.
கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் வேற லெவல். குறிப்பாக துஷாரா விஜயனின் ரோல் மிரட்டுகிறது. துஷாராவின் நடிப்பு தனுஷின் நடிப்பை தாண்டி பேசப்படும். வில்லன் எஸ்.ஜே. சூர்யாவை வழக்கம் போல் அடாவடியான வில்லனாக காட்டாமல், பொறுமையாக யோசித்து செயல்படும் வில்லனாக காட்டிய விதம் படத்திற்கு பலம்.
செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். ரத்தம் தெறிக்க தெறிக்க அனைத்து சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் Clinic-ல் நடக்கும் சண்டை காட்சி வெறித்தனம்.

சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சரவணன், அபர்ணா பாலமுரளி என அனைவரின் நடிப்பும் பக்கா. குறை என்று பார்த்தால் குழந்தைகளால் இப்படத்தை கொண்டாட முடியாது என்பது தான். மற்றபடி, படம் ஹாலிவுட் தரத்தில் உள்ளது.
படத்தில் நடிக்கவில்லை என்றால் ‘நான் தான்டா ஹீரோ’ என பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி நம்மை சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக ரஹ்மான் குரலில் உசுரே நீதானே நீ தானே வரும் போது கண் கலங்குகிறது.