அது நள்ளிரவு நேரம். பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர் நகரத்தின் சின்னமான பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தது.
![](https://paarvaionline.com/wp-content/uploads/2024/03/screenshot10677-1711593003-1024x576.jpg)
கப்பலின் விளக்குகள் திடீரென அணைந்ததால், கப்பலில் இருந்த பணியாளர்கள் இருளில் மூழ்கினர்.
மின்னணு சாதனங்கள் ஏதும் இல்லை. இயந்திரம் செயலிழந்துவிட்டது. கப்பலில் இருந்தவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். நடப்பது எதையும் தடுக்க முடியவில்லை.
சிக்கலைச் சரிசெய்து மீண்டும் கப்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தோல்வியுற்றன. பல சோதனை முயற்சிகள் செய்யப்பட்டதால் ஏராளமான அலாரங்கள் ஒலித்தன.
கப்பலில் இருந்த ஒரு உள்ளூர் மாலுமி வெறித்தனமாக கட்டளையிட்டார். சுக்கான் துறைமுகத்திற்கு கப்பலைத் திருப்பவும், பாலத்தை நோக்கி நகர்வதைத் தடுக்க நங்கூரத்தை இறக்கவும் பணியாளர்களிடம் கூறினார்.
எமர்ஜென்சி ஜெனரேட்டர் ஆன் செய்யப்பட்டதாக நம்பப்பட்டாலும், கப்பல் அதன் என்ஜின்களின் திறனை மீண்டும் பெறவில்லை.
மாலுமிகள் வேறு வழியின்றி தவித்தனர். உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.30க்கு சற்று முன், அவர்கள் கடைசி நேர அவசர அழைப்பை (Mayday Call) விடுத்தனர். கப்பல் மோதப்போகிறது என்று எச்சரித்தனர்.
![](https://paarvaionline.com/wp-content/uploads/2024/03/mm-1024x683.jpg)
மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கப்பல் குழுவினரை “ஹீரோக்கள்” என்று பாராட்டியதற்கு இந்த அவசர அழைப்புதான் காரணம். அவர்களின் விரைவான நடவடிக்கை “உயிர்களைக் காப்பாற்றியது” என்று கூறினார். ஏனெனில் அழைப்புக்கும் மோதலுக்கும் இடையிலான இரண்டு நிமிடங்களில் பாலத்தின் மீது வாகனப் போக்குவரத்தை அதிகாரிகளால் நிறுத்த முடிந்தது.
ஆனாலும், 2.4 கிமீ நீள பாலத்தின் மீது ஒரு கான்கிரீட் தூணில் 948 அடி நீள கன்டெய்னர் கப்பலான டாலி கப்பல் மோதுவதை அவர்களால் நிறுத்த முடியவில்லை. படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இருண்ட, குளிர்ந்த நீரில் துண்டு துண்டாக இடிந்து விழுந்தது.
கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள். கப்பலின் பணியாளர்கள் யாருக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
47 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது, நாள்தோறும் சுமார் 30,000 மேரிலேண்ட் மக்களுக்கு இது ஒரு வழக்கமான பயணப் பாதையாகும்.
டாலி கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.