உலகப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தமது மனைவியை விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தமது மனைவியான மெலிண்டாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இதனால் நீண்ட 27 ஆண்டு கால திருமணம் வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், இது மிகுந்த ஆலோசனைகளுக்கு பின்னர் எடுக்கப்பட்ட முடிவு எனவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார்.
தொடர்ந்து, அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார். குறித்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டாவுடன் நட்பாக பழகிய பில் கேட்ஸ் பின்னர் அந்த உறவு ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொள்ளும் நிலைக்கு உயர்ந்தது.
அதன்பின்னர், கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
லாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு பில் மற்றும் மெலிண்டா தம்பதி விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர்.