ரஷ்யாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் வெயிலில் இருந்து தப்பிக்க கடற்கரை, நீர்த்தேக்கம், பூங்கா என குளிர்ச்சியான பகுதிகளுக்கு ரஷ்யர்கள் படையெடுக்கின்றனர்.
ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ் பர்க் நகரில் உள்ள இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் குவிந்துள்ளது இந்தியாவில் 40, 41 டிகிரி செல்சியஸ் என வெயில் கொளுத்துவது சர்வ சாதாரணம் என்றாலும் குளிர் பிரதேசமான ரஷ்யாவில் நிலவும் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
தலைநகர் மாஸ்கோவிலும் இதே நிலைமைதான். மாஸ்கோவில் கடந்த திங்கட்கிழமை பதிவான 34.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை 120 ஆண்டுகளில் இல்லாதது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நகரின் மையத்தில் அரசு கட்டிடங்களின் எதிரே அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுகளின் அருகே அமர்ந்துகொண்டு மக்கள் இளைப்பாறுகின்றனர். நீரூற்றுகளில் வரும் தண்ணீரில் விளையாடியபடி நீண்டநேரம் பொழுதை கழிக்கின்றனர்.
கடற்கரைகள், பூங்காக்கள் மட்டுமின்றி ஒருசிலர் ரஷ்யாவின் எகோடியா நகரில் பனிப்படலங்கள் நிறைந்த பகுதிகளுக்கும் பயணிக்கின்றனர்.
கோடை காலத்தில் இறைச்சி மற்றும் சூடான உணவுகளை தவிர்க்கும் ரஷ்யர்கள், ஐஸ்கீரிம் மற்றும் குளிர்பானங்களை வாங்கி உண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் பருவநிலை மாறுபாடே ரஷ்யாவில் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.