ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 15ம் தேதி அறிவிக்கப்படுகிறது. ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்படும் எனத் தெரிகிறது.
இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டு ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணித் தேர்வு வரும் 15ம் தேதி நடக்கவுள்ளது. உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச தொடர் என்றாலும், முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரும் திட்டமும் உள்ளது.
இதற்கு முன் நியூசிலாந்து தொடரில் கோஹ்லி, முகமது ஷமிக்கு சில போட்டிகளில் ஓய்வு தரப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் ஓய்வில் தான் உள்ளார்.
இதுகுறித்து இந்திய அணி தரப்பில் வெளியான செய்தி:
இந்திய ‘சீனியர்’ வீரர்களின் பணிச்சுமை குறித்து தேர்வுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். போட்டிகள் மற்றும் தொடருக்கு இடையே போதிய ஓய்வு தர வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் தான் நியூசிலாந்து தொடரில் கோஹ்லிக்கு ஐந்து போட்டிகளில் ஓய்வு தரப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க உள்ள ‘டுவென்டி–20’ தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு தரப்படலாம். ஒருநாள் தொடருக்கான அணியில் சோதனை முயற்சிகள் செய்ய வாய்ப்பு இல்லை. உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்புக்கு வழி ஏற்படுத்தி, அவர்கள் எழுச்சி பெற்றுவிடாமலும் பார்த்துக் கொள்ளப்படும்.
இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தன்னம்பிக்கையுடன் களமிறங்கும். இதனால் ஓய்வு என்ற பெயரில் அணிக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்வோம்.
யார் கீப்பர்?
தற்போதைய நிலையில், இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்துக்கு தினேஷ் கார்த்திக், ரிஷாப் பன்ட் இடையே ஆரோக்கியமான போட்டி காணப்படுகிறது. கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு துவக்க வீரர் ஷிகர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்ப வாய்ப்பு உண்டு. பும்ரா, புவனேஷ்வர், முகமது ஷமி, கலீல் உள்ளிட்ட நான்கு வேகப்பந்துவீச்சாளர்களும் நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். இவர்களுக்கு ஓய்வு தர வேண்டிய அவசியமில்லை. சுழற்சி முறையில் பயன்படுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அட்டவணை
இரண்டு ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் போட்டிகள் அட்டவணை
தேதி போட்டி இடம்
பிப். 24 முதல் ‘டுவென்டி–20’ விசாகப்பட்டனம்
பிப். 27 2வது ‘டுவென்டி–20’ பெங்களூரு
மார்ச் 2 முதல் ஒருநாள் ஐதராபாத்
மார்ச் 5 2வது ஒருநாள் நாக்பூர்
மார்ச் 8 3வது ஒருநாள் ராஞ்சி
மார்ச் 10 4வது ஒருநாள் சண்டிகர்
மார்ச் 13 5வது ஒருநாள் டில்லி
* ‘டுவென்டி–20’ போட்டிகள் இரவு 7:00 மணி, ஒருநாள் போட்டிகள் மதியம் 1:30 மணிக்கும் துவங்கும்.