மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களான இரு அருட்தந்தையர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
குறி்த்த உத்தரவானது கடந்த 01ஆம் திகதி (01.07.2024) பிறப்பிக்கப்பட்டது.

குறித்த ஆயர் இல்லத்தில் கடந்த ஏப்ரல் 2ம் திகதி ஆயர் தலைமையில் வணபிதாக்களின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது அந்த கலந்துரையாடலை திருட்டுத்தனமாக வீடியோ பதிவு செய்து அதனை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக அவர்ளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆயர் இல்லத்தினால் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சம்பவத்தின் போது வீடியோ பதிவு செய்து அதளை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர் என சந்தேகத்தின்பேரில் இரு அருட்தந்தையர்களிற்கு எதிராக கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் சந்தேகநபர்களான இரு அருட்தந்தையர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்றை பிறப்பித்து கட்டளையிட்டார்.

கத்தோலிக்க திருச்சபையில் தங்களது உள்ளக விவகாரங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆயர் தலைமையில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும்.
நீண்ட காலமாக உலக நாடுகளிலும் இலங்கையிலும் இந்த மரபுகளே பேணப்பட்டு வந்தன.
எனினும், வரலாற்றில் முதன் முறையாக ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இது போன்ற விடயங்களுக்கான முதன்முறையாக அருட்தந்தையர்களை விசாரணைக்குட்படுத்துவதும் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.