கண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி நீதி கோரி எழுப்பிய கோசங்களால் விண்ணதிர்ந்தது!!!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி இன்று கண்ணீரால் நனைந்து. சர்வதேசத்திடமும், அரசிடமும் நீதி கோரி அவர்கள் எழுப்பிய கோசங்களால் விண்ணதிர்ந்தது. இந்த மக்களுக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் வேளமாளிதன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் காலை ஒன்பது மணிக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் அங்கிருந்து ஏ9 வீதி 155 ஆம் கட்டையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை சென்றடைந்து அங்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டு, அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டமையால் நகர் வெறிசேடியிருந்தது. பாடசாலைகளுக்கு உள்ளுர் ஆசிரியர்கள் வருகை தந்திருந்த போதும் மாணவர்கள் எவரும் சமூகமளித்திருக்கவில்லை. அரச திணைக்களங்களில் வெளிமாவட்ட உத்தியோகத்தர்கள் பேரூந்து போக்குவரத்து இன்மையால் பெருமளவு சமுகமளித்திருக்கவில்லை. திணைக்களங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் சேவைகள் இடம்பெறவில்லை. இவ்வாறு மாவட்டத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திக்கு ஆதரவு வழங்கியிருந்தார்கள்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இரண்டு வருடங்களை கடந்தும் எவ்வித தீர்வும் எட்டப்படாது தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய மாபெரும் கண்டன போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அருட்தந்தையர்கள், ஏனைய மதங்களின் குருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , . வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர்கள்,பொது அமைப்புகள், யாழ் பல்கலைகழக சமூகம், தொழிற்சங்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சட்டத்தரணிகள்,என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.