தமிழ்நாட்டில் ரூ.28 ஆயிரத்து 508 கோடி முதலீட்டில் 49 திட்டங்கள் மூலம் 83 ஆயிரத்து 482 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சென்னை கிண்டியில் ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இன்று காலை 11 மணியளவில் தொழில் துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு என்ற மாபெரும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள் பங் கேற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது சிறப்பு அம்சங்களாக ரூ.17,141 கோடி முதலீட்டில் 44,054 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 35 தொழில் திட்டங்களுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.7,117 கோடி முதலீட்டில் 6,798 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த 49 திட்டங்களின் மூலம் ரூ.28,508 கோடி முதலீட்டில் 83,482 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகிட வழிவகை கிடைத்துள்ளது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-ஐ முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில் வணிகம் புரிதலுக்கு தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட சேவைகள் இந்த இணையதளத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்து, செயல்படும் புதுத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம், அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் சங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த டிஜிட்டல் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக புதுத் தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த மானியத்திற்காக ஏறக்குறைய 75 புதுத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அவற்றில் கோர் ஸ்டாக், அட்சுயா டெக்னாலஜிஸ், பெசிப்யர், ஸ்பெயர் பே, பிளத்தி ஆகிய 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான மானிய அனுமதி உத்தரவுகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
உயர்தர உற்பத்தி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உள்ள தொழிலகங்களுக்கான விமானம் மற்றும் விமான எந்திர பாகங்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு திறன்மிகு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டிட்கோ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
ரூ.17,141 கோடி முதலீட்டில் 55,054 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முதலீடுகள், மின் ஆலைகள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவைகள், பொது உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், காலணிகள், மருத்துவப் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட பின்வரும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.