திருமணம் பார்க்கும்போது இருவிதமான தோஷங்கள் மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ளது. அவைகள்1.செவ்வாய் தோஷம்2.ராகு-கேது தோஷம்
![](https://paarvaionline.com/wp-content/uploads/2024/03/tc_content_image-18-copy.jpg)
செவ்வாய் தோஷம் :
செவ்வாய் தோஷம் என்னவென்பதை அறிந்து கொண்டால் அதற்கு தகுந்தாற்போல் செவ்வாய் தோஷம் உள்ள நபர்களுக்கு தகுந்த வரன்களை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்பது நம் முன்னோர்களின் கூற்றாகும். இதை ஏன் இவ்விதம் நம் முன்னோர்கள் கூறினார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முதலில் செவ்வாய் தோஷம் என்றால் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்.செவ்வாய் தோஷம் என்பது செவ்வாய் கிரகமானது குடும்ப ஸ்தானங்களை அமைக்கக்கூடிய இடங்களான 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருப்பதாகும். இந்த இடங்களில் செவ்வாய் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று எடுத்து கொள்ளப்படுகின்றது. செவ்வாய் தோஷத்தில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன.செவ்வாய் என்ற கிரகம் உயிரினங்கள் இடத்தில் ஓடும் ரத்தத்தை குறிக்கக்கூடிய கிரகம் ஆகும். மேலும் செவ்வாய் என்ற கிரகம் படைத்தளபதியாகவும் கருதப்படுகின்றது. கோபம், வீரம் போன்றவற்றிற்கு காரணமானவர்களாக விளங்கக்கூடியவர் செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நபர்களிடம் ரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகமாக இருக்கும். இந்த வேகமானது சிலருக்கு கோபங்களாகவும், சிலருக்கு தாம்பத்தியம் மீது ஆர்வமும், சிலருக்கு உணர்ச்சிகள் மற்றும் ஆசைகளாகவும் இருக்கக்கூடியதாகும்.செவ்வாய் தோஷம் உள்ள நபர்கள் எதிர்பாலின மக்களின் மீது ஒரு விதமான ஈர்ப்பு கொண்டிருப்பார்கள். அவர்களின் மீது ஆசைகள் வளர்த்துக்கொள்ளக்கூடிய நபர்களாகும் இருக்கின்றனர்.திருமண வாழ்க்கையில் இணையும்போது தாம்பத்திய சுகம் என்பது தம்பதியினர் இருவருக்கும் மிகவும் இன்றியமையாததாகும். அதில் ஒருவருக்கு அதிக விருப்பமும், மற்றவருக்கு விருப்பமின்றியும் இருக்கும் பட்சத்தில் அங்கே முதன்முதலாக பிரச்சனைகள் தோன்ற துவங்குகின்றன. இந்த கருத்து வேறுபாடுகள் நாளடைவில் இவர்களுக்கு இடையே ஒரு பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்குகின்றது.செவ்வாய் தோஷமுள்ள நபரானவர் தனது கோபத்தினால் என்ன செய்கின்றோம் என்று அறியாது சில செயல்களையும் செய்துவிடுகின்றனர். இதுவே அவர்களின் பிரிவினைக்கு காரணமாகிறது. இந்த காரணத்தை அடிப்படையாக கொண்டே நமது முன்னோர்கள் செவ்வாய் தோஷம் உள்ள நபர்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ள நபர்களை இணைக்க வேண்டும் என்று கூறினார்கள்.ஏனெனில், செவ்வாய் தோஷம் உள்ள நபர்களை முழுமையாக திருப்திப்படுத்த கூடியவர்கள் அவர்களுக்கு இணையானவர்களாக இருக்க இயலும். இருவரும் சமமாக இருக்கும் பட்சத்தில் கிடைக்கும் இன்பமானது இருவருக்கும் சம அளவில் பங்கிடப்படுகின்றன. ஒருவருக்கு விருப்பமும், ஒருவருக்கு விருப்பம் இன்றியும் இருக்கும் பொழுது அவர்களுக்கு இடையே கிடைக்கும் இன்பமானது ஒருதலைப்பட்சமாக இருக்கின்றது. இதுதான் இங்கே முதன்மை காரணமாக கருதப்படுகின்றது.செவ்வாய் தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் என்பது அவர்களை ஜாதகம் முறையில் இணைப்பதே ஆகும். ஆண் ஜாதகருக்கு 7, 8 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் பெண்ணிற்கும் அதே இடங்களில் செவ்வாய் இருக்குமாறு திருமணம் செய்வதும் அதேபோல 2, 4, 12 ஆகிய எந்த இடங்களில் செவ்வாய் இருந்தாலும் அதே அமைப்புடைய ஜாதகரோடு திருமணம் செய்யும்போதும் தாம்பத்ய வாழ்வு சிறக்கும். இதுவே அவர்கள் செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும்.நடைமுறையில் இதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில் காதல் கொள்ளும் நபர்களும் இதைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. காதல் செய்யும் நபர்களில் ஒருவருக்கு செவ்வாய் இருந்து மற்றவருக்கு செவ்வாய் இல்லாமல் இருந்தும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இணையலாமா அல்லது அவர்களின் துணைவருக்கு இந்த தோஷத்தினால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று பலவிதமான கேள்விகள் மக்களிடையே இருக்கின்றது.முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது எந்த ஒரு தோஷத்திற்கும் யாரையும் கொல்லக்கூடிய சக்திகள் என்பது கிடையாது. தோஷம் என்பது நாம் செய்த கர்ம வினையை அனுபவிக்க இப்பிறவியை எடுத்ததாகும்.ஆகவே ஒருவருக்கு மரணம் ஏற்படுமாயின் அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளின் படியே ஏற்படுகின்றது. இதில் இவருடன் இணைந்த பின்பு இவருக்கு மரணம் ஏற்பட்டதும் இந்த தோஷத்தினால் ஏற்பட்டது என்று கூறுவதும் சரியானதல்ல.திருமணத்தில் இருவரின் ஜாதகங்கள் ஒன்றிணைந்து செயல்படும் பட்சத்தில் இவரின் தோஷமானது அவரை அடித்துவிட்டது என்று கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். இது முற்றிலும் தவறாகும். அவர்களுக்கான திசாபுத்திகளையும் அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளையும் நாம் சரிவர ஆராய்ந்தே கூற வேண்டும்.காதலில் விழுந்த இரு நபர்களுக்கு ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இல்லாத பட்சத்தில் அவர் உடன் இணையும் மற்றொருவர் அவருக்கு இணையாக செயல்படுதல் என்பது இருவருக்கும் உள்ள பிணைப்பை அதிகப்படுத்தும்.காதல் என்பது ஒருவிதமான அன்பாகும். அந்த அன்பிடம் நாம் தோற்பதும், விட்டுக்கொடுப்பதும் நமது வாழ்க்கையின் மகிழ்ச்சியானதாக இருக்கின்றது என்பதை அவர்கள் உணர்வது மட்டுமே இந்த தோஷத்திற்கான சிறந்த பரிகாரம் ஆகும்.தோஷம் இல்லாதவர் தோஷம் இருக்கக்கூடியவர்களிடம் அடங்கி செல்கின்றார் என்ற ஒரு காரணத்திற்காகவே தோஷம் இருப்பவர் அவர்களை அடக்கி ஆள்வது என்பது சரியானதாக இருக்காது. ஆகவே தோஷம் இருக்கக்கூடியவர் இதை உணர்ந்து தோஷம் இல்லாதவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் இல்வாழ்க்கையும் நன்முறையில் மகிழ்ச்சியாக சகல சௌபாக்கியங்களுடன் அமைகின்றது.பெரியவர்கள் பார்த்து செய்யும் திருமணத்தில் இவைகள் யாவும் கவனித்து செய்யப்படுகின்றன. ஆனால் கிரகங்கள் செய்யும் வேலைகளிலும் நமது நடைமுறை சூழல்களாலும் இளைய சமுதாயம் செய்கின்ற இதுபோன்ற செயல்களில் இவர்கள் கவனிப்பதில்லை. இருவரும் இணைந்த பின்பு அவர்களுக்குள் ஏற்படும் சிறு கருத்து வேறுபாடுகள் அவர்களின் பிரிவினைக்கு காரணமாக இருக்கின்றன. இதை நாம் முழுமையாக அறிந்து கொண்டால் நமது வாழ்க்கையும், திருமண வாழ்க்கையும் இனிமை உடையதாக இருக்கும்.