
எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகிறார். தம்முடைய சீஷரில் இருவரிடம், நீங்கள் கிராமத்துக்குள் போங்கள், அங்கே ஒரு கழுதைக்குட்டியைப் பார்ப்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார். அந்தக் கழுதைக்குட்டி கொண்டு வரப்பட்டபோது, இயேசு அதன் மேல் உட்காருகிறார்.
பிறகு, கொஞ்ச தூரத்தில் இருக்கிற எருசலேமுக்குச் சவாரி செய்கிறார். அந்த நகரத்துக்கு அருகில் வந்தபோது ஒரு பெரிய கூட்டமே அவரைப் பார்க்க வந்துவிடுகிறது. அப்போது ஜனங்கள் தங்களுடைய மேலங்கிகளை எடுத்து அவர் வருகிற வழியில் விரிக்கிறார்கள்.
மற்றவர்கள் ஓலைகளை வெட்டி அங்கே போடுகிறார்கள், அப்படிப் போட்டுவிட்டு யெகோவாவின் பெயரில் வருகிற இந்த ராஜாவை கடவுள் ஆசீர்வதிப்பாராக! என்று ஆர்ப்பரிக்கிறார்கள். மக்கள் இயேசுவை வரவேற்கிறார்கள். அந்தக் காலத்தில், இஸ்ரவேலின் புதிய ராஜாக்கள் தங்களை ஜனங்களிடம் காண்பிப்பதற்காக கழுதைக்குட்டியின் மேல் எருசலேமுக்குள் சவாரி செய்வார்கள். இதைத்தான் இயேசு செய்து கொண்டிருக்கிறார். இயேசு தங்களுடைய ராஜாவாயிருக்க விரும்புவதை இந்த ஜனங்கள் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே அவரை விரும்பவில்லை. நமக்கு எப்படித் தெரியும்? ஆலயத்தில் நடந்த சம்பவத்திலிருந்து இதை நாம் தெரிந்துகொள்ளலாம். ஆலயத்தில் குருடரையும் முடவரையும் இயேசு சுகப்படுத்துகிறார். இதைப் பார்த்த சிறு பிள்ளைகள் இயேசுவைப் புகழ்ந்து ஆரவாரம் செய்கிறார்கள்.
ஆனால் அந்த ஆசாரியர்களுக்கு எரிச்சல் எரிச்சலாக வருகிறது, அவர்கள் இயேசுவிடம், இந்தப் பிள்ளைகள் சொல்வதெல்லாம் உம் காதில் விழுகிறதா? என்று கேட்கிறார்கள். ஆம், என் காதில் விழுகிறது, சிறு பிள்ளைகளுடைய வாயிலிருந்து கடவுள் துதி உண்டாகச் செய்வார் என்று பைபிளில் சொல்லியிருப்பதை நீங்கள் ஒருநாளும் வாசிக்கவில்லையா? என்று இயேசு பதிலுக்கு கேட்கிறார். அதனால் அந்தப் பிள்ளைகள் விடாமல் கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவைத் துதிக்கிறார்கள்.
இந்தப் பிள்ளைகளைப் போல் இருக்க நாம் ஆசைப்படுகிறோம் இல்லையா? கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்லி சில ஆட்கள் நம்மைத் தடுக்கலாம். ஆனாலும், இயேசு செய்யப் போகிற அதிசயமான காரியங்களைப் பற்றி நாம் தொடர்ந்து ஜனங்களிடம் சொல்லிக் கொண்டே இருப்போம். இயேசு பூமியில் இருந்தபோதே ராஜாவாக ஆட்சி செய்ய தொடங்கிவிட்டாரா? இல்லை. அப்படியானால், அவர் ஆட்சி செய்யப் போகிற அந்தக் காலம் எப்போது வரும்? இயேசுவின் சீஷர்கள் அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.