புதுச்சேரியில் அனைவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 11ம் தேதிமுதல் புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்தது. ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கவும், தொடர்ந்து தலைக்கவசத்தை அணியாமல் அபராதம் செலுத்துவோர்களின் ஓட்டுநர் உரிமத்தை முடக்கவும் கிரண் பேடி உத்தரவிட்டார்.
அதன்படி போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டித்து நேற்று அரசு சார்பு நிறுவனங்களின் ஊழியர்கள் மண்சட்டியை தலையில் அணிந்தபடி இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று புதுவை பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைக்கவசத்தை உடைத்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து பேசிய ஆளுநர் கிரண் பேடி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தியது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று கூறியுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியுள்ளோம் என்றும் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும் அவர் தெரிவித்தார். கட்டாய ஹெல்மெட் உத்தரவுக்கு கால அவகாசம் வழங்க முடியாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த முதல்வர் நாராயணசாமி தடையாக இருப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்று கிரண் பேடி தெரிவித்தார்.