யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக சீரமைப்பு உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது.
இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடையும் அவர் முற்பகல் 10 மணிக்கு நல்லூர்ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார்.
வழிபாடுகளை முடித்து கொண்டு யாழ். மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதமர் மாவட்ட செயலக அலுவலர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அந்த கலந்துரையாடலை முடித்து கொண்டு நண்பகல் 12.15 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டட தொகுதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் மதிய உணவை முடித்து கொண்டு பிற்பகல் 1.45 மணியளவில் இருந்து பிற்பகல் 2 மணி வரைக்கும் நாவற்குழி மற்றும் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலங்கள் தொடர்பானஆராய்வையும் மேற்கொள்ளவுள்ளார்.
அங்கிருந்து பிற்பகல் 2.15 மணிக்கு கோப்பாய்க்கு செல்லும் பிரதமர் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக நிர்வாக கட்டடத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
இதன் பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் பருத்தித்துறைக்கு செல்லும் அவர் பிரதேச செயலக நிர்வாக கட்டடத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து மாலை 4.15 மணியளவில் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கும் செல்லும் பிரதமர், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்துவது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொள்ளவுள்ளார்.
பின்னர் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டி பகுதியில் மக்களுக்கான வீட்டுத்திட்டம், பாடசாலை, பேருந்து நிலையம் உள்ளிட்டவைக்கான அடிக்கல்லை நடவுள்ளார்.
அதன் பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு செல்லும் அவர் துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்வுகளை மேற்கொள்ளவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.