ஈழத் தமிழர்களின் மனித உரிமையையும் ஜனநாயக உரிமையையும் நிலைநாட்ட,
கனடிய கொன்சவ்வேட்டிவ் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்கும் என்று அறிவித்தார்
கனடிய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அன்றூ ஸ்சியர் அவர்கள்.
மிசிசாக்க தமிழ் ஒன்றியம் ஒருங்கமைத்து நடாத்திய தமிழ் மரபுத் திங்கள் மற்றும்
பொங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,
சிறீலங்காவைப் பொறுத்தவரையில், மேற்குலக நாடுகளிடமிருந்து கணிசமான தொகை
நிதியுதவியைப் பெறுகின்ற ஒரு நாடு என்ற வகையில், சிறீலங்கா தனது ஜனநாயக
விழுமியங்களைப் பேணுவதற்கும் மனிதஉரிமையை மதிப்பதற்கும் முன்னுரிமை
வழங்க வேண்டும். கனடாவில் ஆட்சியிலுள்ள லிபரல் கட்சி கனடிய தமிழ் மக்களுக்கு
கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் குறித்து போதிய எந்த நடவடிக்கையையும்
எடுக்காமலிருப்பது கவலைக்குரியது. அதனால்தான் கடந்த வருடம், ஒரு பொறுப்புள்ள
எதிர்க்கட்சி என்ற வகையில், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும்
போர்க்குற்றச் சாட்டுக்கள் குறித்த விடயத்தில் காத்திரமான நடடிவக்கைகளை
எடுக்கும்படி கனடிய அரசுக்கு பகிரங்க அழுத்தம் கொடுத்தோம் என்று தனது உரையில்
குறிப்பிட்டார்.
கொன்சவ்வேட்டிவ் கட்சியைப் பொறுத்தவரை, கனடிய நாடு உலகெங்குமுள்ள
சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்துப் பேணும் விடயத்தில் உறுதியான ஒரு
நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றும், பேச்சுரிமை மற்றும் மனிதஉரிமை பாதுகாப்பு
விடயத்தில் இன்னும் கனதியான பங்களிப்பை வழங்க வேண்டுமென்றும் நம்புகிறது
என்றும் அவர் தெரிவித்தார்.
மிகவும் கட்டுக்கோப்பும் கடின உழைப்பும் கொண்ட தமிழ் சமூகத்தினரை விதந்து
பாராட்டிய கௌரவ அன்றூ ஸ்சியர் அவர்கள், தமிழர்களின் வளர்ச்சியையும்
எழுச்சியையும் தாம் பெரிதும் மதிப்பதாகக் கூறி, தமது பொங்கல் வாழ்த்துக்களை நேரில்
பகிர்ந்து கொண்டார்.