தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளை மறந்து பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணைந்து ஆதரவை வழங்குமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமரின் கொன்சர்வேற்றிவ் கட்சியைச் சேர்ந்த 317 உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே இவ்விடயத்தை கூறியுள்ளார். அத்தோடு பிரெக்ஸிற்றை கையாளும் விதம் தொடர்பாக வரலாறு தம்மை பற்றி தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரெக்ஸிற் மூலோபாயங்கள் தொடர்பான கணிசமான வாக்குகளை பெற்றுக்கொள்ள கொன்சர்வேற்றிவ் கட்சி தவறியுள்ளது. இந்நிலையில் பிரதமர் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.
அத்தோடு அடுத்த வாரம் தாம் பிரசல்ஸ் பயணிக்கவுள்ளதாகவும் ஐரோப்பிய ஆணையக தலைவர் ஜீன் க்ளூட் ஜூங்கரை சந்திக்கவுள்ளாகவும் அந்தக் கடிதத்தில் பிரதமர் கூறியுள்ளார்.
அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல தலைவர்களையும் சந்தித்து பிரெக்ஸிற் தொடர்பாக பேசவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
பிரெக்ஸிற்றின் பின்னர் அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு இடையில் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்கான காப்புறுதி கொள்கையொன்றை பிரதமர் தயாரித்துள்ளார். எனினும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அதனை விரும்பவில்லை. இந்நிலையில் பிரதமர் மேயின் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
எனினும் பிரெக்ஸிற் தொடர்பான பேச்சுவார்த்தைகள் யாவும் நிறைவடைந்துவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியாக கூறி வருகின்றது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிஸ் தலைமை பேச்சாளர் மைக்கல் பார்னியரைஇ பிரெக்ஸிற் செயலாளர் ஸ்டீபன் பார்க்லே நாளைய தினம் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.