இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் அணி என மூன்றாக பிரிந்தது. மூன்று அணியினரும் இரட்டை இலை சின்னத்தை சொந்தம் கொண்டாடியதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
இதற்கிடையே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றாக இணைந்தனர். இதனால் தினகரன் அணி மற்றும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி இரட்டை இலை சொந்தம் கொண்டாடியது. பின்னர் நடைபெற்ற பல கட்ட விசாரணைக்கு பிறகு இறுதியில் 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதற்கான காரணங்களையும் வெளியிட்டது.இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேற்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இரு தரப்பி வாதங்களையும் கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 8-ம் தேதி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்பது குறித்து அதிரடி தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு வழங்க உள்ளது.