இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனிக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் நாளை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விக்கெட் கீப்பர் டோனி கேட்ச் பிடிக்கும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அணியின் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் ராகவேந்திரா பந்தை எறிந்து டோனிக்கு பயிற்சி அளித்தார். அப்போது பந்து திடீரென டோனியின் வலது முன்கையில் பட்டதால் டோனி வலியால் துடித்தார்.
அதன் பின்னர் பேட்டிங் பயிற்சியிலோ அல்லது பீல்டிங் பயிற்சியிலோ அவர் ஈடுபடவில்லை. அதனைத் தொடர்ந்து டோனிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் அவர் ஓய்வு எடுக்க சென்றார்.
காயத்தின் தன்மை குறித்து இதுவரை தெரியாத நிலையில், நாளைய போட்டியில் டோனி பங்கேற்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. நாளை காலை தான் டோனி பங்கேற்பது குறித்து தெரிய வரும் என அணிநிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில்இ டோனி விளையாடவில்லை என்றால் ரிஷப் பண்ட் கீப்பராக களமிறங்குவார் என்று தெரிகிறது.
அல்லது கே.எல்.ராகுலுக்கு விக்கெட் கீப்பர் பணி அளிக்கப்பட்டு, அம்பத்தி ராயுடு களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.