தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் வடிவுக்கரசியும் ஒருவர். சிவப்பு ரோஜாக்கள், கன்னிப் பருவத்திலே, முதல் மரியாதை, கருத்தம்மா, வனஜா கிரிஜா, அருணாச்சலம், காலம் மாறிப்போச்சு உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போதும் சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை, தி.நகரில் உள்ளது.
கடந்த 10 நாட்களாக வடிவுக்கரசி, அருகில் உள்ள மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று அவர் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததும், அதிலிருந்து 8 சவரன் நகை திருடு போய் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து வடிவுக்கரசி, போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.