செல்லையா மெற்றாஸ்மயில்
ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த அவர், அண்ணாவிமாரைக் கெளரவிப்பதிலும் அவர்கள் பற்றிய ஆவணங்களைத் தயாரிப்பதிலும் காத்திரமான பங்காற்றியவர். “வேழம்படுத்த வீராங்கனை” என்ற நாடகத்தை நெறியாழ்கை செய்து பல முறை மேடையேற்றிய பெருமையும் இவருக்குரியது. பாரம்பரியக் கலைகள் தொடர்பான பல நூல்களையும் இறுவெட்டுக்களையும் வெளியிட்டவர்.
1945 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிறந்தவர். 1936 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் மெயில் என்ற படம் வந்த போது அந்தப் படத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் இவரது தந்தை இவருக்கு மெற்றாஸ்மயில் என்று பெயரைச் சூட்டினார். யாழ்ப்பாணம், தீவகம் ஆகிய கல்வி வலயங்களில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற பின் கிளிநொச்சி கல்வி வலயத்தில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தவர். 1945 ஆம் ஆண்டு பிறந்த இவர் புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலத்தில் கல்வி கற்று சித்தியடைந்த பின்னர் யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியில் உயர்தர வகுப்புப் படித்து கொழும்பு பல்கலைக்கழகம் சென்றவர்.
பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாட்டின் குழப்பமான சூழ்நிலையிலும் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, மலையகம், மன்னார், உடப்பு, புத்தளம் ஆகிய இடங்களுக்கு சென்று பல பாடல்களைப் பெற்று ஆவணப்படுத்தியிருக்கின்றார்.
ஈழத்தின் இசை நாடகக் கலைஞர்கள் பலரை ஒருங்கிணைத்துச் செய்த இந்த ஒலி ஆவணப்படுத்தல் முயற்சியின் விளைவாக, பல ஆண்டுகளுக்கு முன்னர் கோயில்களிலும், விழாக்களிலும் விடிய விடிய அரங்கேறும் முழு நீள இசை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களை அப்படியே முழு அளவிலாகப் பதிவு பண்ணிச் செய்த பெருமுயற்சியாக அமைந்தது. அந்த வகையில் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்கள் ஈழத்து இசை நாடகத் துறைக்கு ஆற்றிய பணி வரலாற்றில் பதிவு பண்ணத்தக்கதாக அமைந்து விட்டது.
செல்லையா மெற்றாஸ்மயில் அவர்களின் கலைப்பணியைக் கெளரவித்து தங்கக்கிரீடம் என்ற மலர் 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
எழுத்தாளனாக இவரின் ஐந்து முக்கிய படைப்புக்களாக,
வன்னி வள நாட்டார் பாடல் (1981),
ஆனையை அடக்கிய அரியாத்தை (1993),
இசை நாடக மூத்த கலைஞர் வரலாறு (1999),
மண் வாசனையில் மூன்று நாடகங்கள் (2000),
மரபு வழி இசை நாடகங்கள் ஒன்பது (2001)
வெளியிட்ட இறுவட்டுகள்
சம்பூர்ண அரிச்சந்திரா (இசை நாடகம்) 5 மணி நேரம்
காத்தவராயன் (சிந்து நடைக்கூத்து ) – 6 மணி நேரம் ( 2 இறுவட்டுக்கள்)
சத்தியவான் சாவித்திரி (இசை நாடகம்) – 3 மணி நேரம்
நந்தனார் இசை நாடகம் ( இசை நாடகம்) – 1 1/2 மணி நேரம்
சிறீ வள்ளி (இசை நாடகம்) – 1 1/2 மணி நேரம்
கோவலன் கண்ணகி (இசை நாடகம்) – 2 3/4 மணி நேரம்
சாரங்கதாரன் (இசைநாடகம்) – 2 1/2 மணி நேரம்
பூதத்தம்பி (இசை நாடகம்) – 2 3/4 மணி நேரம்
பவளக் கொடி (இசை நாடகம்) 3 1/4 மணி நேரம்
நல்ல தங்காள் ( இசை நாடகம்) – 4 மணி நேரம்
ஞான செளந்தரி ( இசை நாடகம்) – 5 1/4 மணி நேரம் ( 2 இறுவட்டுக்கள்)