பிப்ரவரி 9 1913ஆம் ஆண்டு இதே நாளில்தான் பெரும் எரிநட்சத்திர ஊர்வலம் என்று குறிப்பிடப்படும் நிகழ்வு ஏற்பட்டது.
வழக்கமாக, எரிநட்சத்திரம் என்று நாம் குறிப்பிடுபவை, கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மைக் கடந்து சென்று மறைந்துவிடும். ஆனால், இந்நிகழ்வின்போது, ஒவ்வொரு எரிநட்சத்திரமும் 30 முதல் 40 நொடிகளுக்குத் தெரியுமளவுக்கு நிதானமாகக் கடந்து சென்றது.
இவ்வாறான 40இலிருந்து 60 வரையான எரிகோளங்கள் வானின் இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசிக்குக் கடந்து சென்றன. இவ்வாறு எரிநட்சத்திரங்கள் கடந்துசெல்வது கிட்டத்தட்ட 5 நிமிடங்களுக்கு நீடித்தது.
கனடாவின் பல பகுதிகள், அமெரிக்காவின் வடகிழக்குப்பகுதி, பெர்முடா ஆகியவற்றிலும், கடலிலிருந்த பல கப்பல்கள் என்று சுமார் 11 ஆயிரம் கி.மீ. நீளப்பகுதியிலிருந்த 3 கோடிப்பேர் இதனைக் கண்டனர். இந்த எரிகோளங்களைக் காணமுடியாத பகுதிகளில்கூட பலர் இடிமுழக்கம் போன்ற ஒலியினைக் கேட்டதாகக் கூறினர்.
பொதுவாக எரிகல் பொழிவுகள் நிகழும் என்றாலும், அவை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பல திசைகளிலும் விழும். இவை வழக்கத்திற்கு மாறாக ஒரே திசையில், வரிசையாகச் சென்றன. இதற்கு 5 மணி நேரத்துக்குப்பின், மறுநாள் அதிகாலையில், அதாவது ஃபிப்ரவரி 9இன் பின்னிரவில் மீண்டும் இவ்வாறு நிகழ்ந்ததாகவும் சிலர் கூறினர்.
கனடாவைச் சேர்ந்த வானியலாளர் க்ளாரன்ஸ் சாண்ட் வெளியிட்ட விரிவான ஆய்வறிக்கையில், புவியைச் சுற்றும் (நிலவைப் போன்ற) இயற்கைத் துணைக்கோள் ஒன்று உருவாகி, அழிந்து வீழ்ந்திருக்கவேண்டும் என்று விளக்கினார்.
இக்கருத்தை மேலும் சில ஆய்வாளர்களும் பின்னர் உறுதிப்படுத்தினர். சுமார் ஒரு மீட்டர் அளவிலான விட்டத்துடன்கூட மிகச்சிறிய துணைக்கோள்கள் அவ்வப்போது உருவாகி புவியைச் சுற்றிவரும் என்றும், ஆனால் இவை தற்காலிகமானவை என்பதுடன் இவற்றைக் காண்பது எளிதல்ல என்றும் கூறப்படுகிறது.
வேறுபல விளக்கங்களுடன், சாண்ட் கருத்துக்கு மறுப்புக்களும் வந்தன. நிலவில் வெடித்த எரிமலையிலிருந்து வெளியேறியவை சிதறி புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.