நண்பர்களான சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), தம்பேஷ் (ஜெகன்), ஆர்த்தி (பிரியா பவானி சங்கர்), ஹரீஷ் (ரிஷி காந்த்) ஆகியோர் சமூகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு எதிராக வீடியோக்கள் எடுத்து, தங்களது ‘பார்கிங் டாக்ஸ்’ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதிகப்படியான லஞ்சம் மற்றும் ஊழல்களால் நாடே மோசமாகி வருவதைக் கண்டு வெகுண்டெழும் நண்பர்கள் குழு, இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால்தான் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு மாயமான சேனாபதி எனும் இந்தியன் தாத்தாவை மீண்டும் கொண்டுவர சமூக வலைதளங்களில் #COMEBACKINDIAN என்ற ஹேஷ்டேக்கில் கோரிக்கை வைக்கின்றனர். அது வைரலாகவே, தைவானில் வர்மக்கலை பயிற்சிப் பள்ளி நடத்தி வரும் சேனாபதிக்கு இத்தகவல் செல்கிறது. மக்களின் குரலுக்குச் செவி சாய்த்து, இந்தியாவிற்கு மீண்டும் வரும் சேனாபதியான ‘இந்தியன்’, லஞ்சம், ஊழல் போன்ற சமூக அவலங்களைக் களைந்தாரா என்பதுதான் ‘இந்தியன் 2’-வின் கதை.
சேனாபதியாக அதே ஸ்டைல், ஆக்ஷனுக்கான உடல்வாகு போன்றவற்றில் கலக்கியிருக்கிறார் கமல்ஹாசன். தன் குரலாலும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார். ஆனால், எமோஷனலான காட்சிகளில் கமல்ஹாசனின் அழுத்தமான நடிப்பை அதீதமான மேக்அப் தின்றுவிடுகிறது. சிகை அலங்காரம், பிராஸ்தடிக்ஸ் என அனைத்துமே படு செயற்கை! துடிப்பான இளைஞனாகக் கவர்வதோடு, எமோஷனலான காட்சிகளிலும் தேவையான நடிப்பைத் தந்து, அக்கதாபாத்திரத்தை முழுமைப்படுத்தியிருக்கிறார் சித்தார்த். ஒரு சில இடங்களில் மட்டும் மிகை நடிப்பைக் குறைத்திருக்கலாம்.
ஜெகன், பிரியா பவானி சங்கர், ரிஷி காந்த் ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த குறைந்தபட்ச வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். சித்தார்த்தின் காதலியாக வரும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு அந்த வேலை கூட இல்லை. எக்கச்சக்க துணை கதாபாத்திரங்களுக்கு நடுவில் சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா ஆகியோர் மட்டும் நினைவில் நிற்கிறார்கள். சம்பிரதாய சி.பி.ஐ அதிகாரிகளாக பாபி சிம்ஹா மற்றும் விவேக். விவேக் சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். வில்லன்களாக குல்ஷானும் ஜாகிர் ஹுசைனும் வில்லத்தனம் செய்யாமல், விளையாட்டுக் காட்டுகிறார்கள். எஸ்.ஜே.சூர்யா, தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், இமான் அண்ணாச்சி என ஒரு டஜன் நடிகர்கள் ஆங்காங்கே வருகிறார்கள், போகிறார்கள், அவ்வளவே!
ஆக்ஷன் காட்சிகளிலும் பிரமாண்ட காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் இருப்பை உணர முடிகிறது. முதல் பாதியின் தேவையில்லாத பாடல்கள், நீளமான ஆக்ஷன் காட்சிகள் போன்றவற்றுக்குக் கண்டிப்பைக் காட்டாமல் ‘இழுத்த்த்த்…திருக்கிறார்’ படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத். அனிருத் இசையில், ‘தாத்தா வர்றாரு’ பாடல் மட்டும் வைப் தர, மற்றவை வேகத்தடைகள் மட்டுமே! பலவீனமான திரைக்கதைக்கு மேலும் பலவீனமான பின்னணி இசை தந்து ஏமாற்றமளிக்கிறார் அனிருத். ‘இந்தியன்’ முதல் பாகத்தில் வரும் இசைத் துணுக்குகள் மட்டும் ஆங்காங்கே ரசிக்கும்படி பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரமாண்ட காட்சிகள் கோரும் அரங்கங்களைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் கலை இயக்குநர் டி. முத்துராஜ். அன்பறிவு, ரமசான், அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, தியாகராஜன் ஆகியோர் அடங்கிய ஆக்ஷன் வடிவமைப்புக் குழுவின் உழைப்பு கவனிக்க வைக்கிறது.
சமகால வடிவத்தில் நிகழும் லஞ்சம், ஊழல் போன்றவற்றை யூடியூப் வீடியோவாக எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்கள் குழு என்ற ஐடியா சுவாரஸ்யமாக இருந்தாலும், அதை இழுத்து முதற்பாதி முழுவதையும் நிரப்பியிருக்கிறது சேனாபதியின் பாத்திரமும், வில்லன்களைக் கொலை செய்ய அவர் கையாளும் யுக்திகளும் தொடக்கத்தில் சிறிது சுவாரஸ்யம் தந்தாலும், வர்மக்கலையை விளக்கும் பக்கம் பக்கமான வசனங்கள், லாஜிக்கற்ற நீளமான காட்சிகள் போன்றவை அவற்றை வீணடித்துவிடுகின்றன. முந்தைய ஷங்கர் படங்களின் ரெப்ரென்ஸ்கள் ஆங்காங்கே வந்தாலும் அவை வேண்டிய ரிசல்ட்டைத் தரவில்லை.
இரண்டாம் பாதியில் ஓரளவிற்கு நம்பிக்கை அளிப்பது சித்தார்த் – சமுத்திரக்கனியின் சென்டிமென்ட் காட்சிகள்தான். இரு நடிகர்களுமே அக்காட்சிகளைச் சரியாகக் கையாண்டிருக்கிறார்கள். பிரச்சனை என்னவென்றால், இந்த இரு கதாபாத்திரங்களைத் தவிர வேறு எந்தக் கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை. இறுதிக்காட்சிக்கு முந்தைய ஆக்ஷன் காட்சிகளே இரண்டாம் பாதியின் பாதியை விழுங்கிவிடுகின்றன. அதிலும் இவ்வளவு நீளமான சேஸிங் சீக்குவன்ஸ் அவசியமா சாரே?! இறுதிக்காட்சிக்குப் பின் வரும் ‘இந்தியன்’ மூன்றாம் பாகத்திற்கான முன்னோட்டக் காட்சிகள் சர்ப்ரைஸாக விரிய, அதற்கே நேரடியாகச் சென்றிருக்கலாமே என்ற எண்ணமே மேலோங்குகிறது.
தர்க்கரீதியாகப் பல காட்சிகள் லாஜிக் ஓட்டைகளால் தள்ளாடுகின்றன. நாடே பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கும் சேனாபதி, மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டு ஜாலியாக கொலைகள் செய்து கொண்டிருக்கிறார். எமோஷனலான காட்சிகளில் மேலும் எமோஷனைக் கூட்ட, தன் லாஜிக் வாளை இஷ்டத்திற்குச் சுழற்றியிருக்கிறார் இயக்குநர்.
எமோஷனலாகவும் ஸ்கோர் செய்யாமல், கமெர்ஷியலாகவும் ஈர்க்காமல் தன் மீள் வருகையில் தடுமாறியிருக்கிறார் இந்த ‘இந்தியன்’ தாத்தா.