தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு அதிக தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு குடிப்பதால் வயிறு நிரம்பிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் போதுமான அளவு உணவு உண்ண முடியாது.
உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லது.உணவு உண்ணும்போது இடையிலும் தண்ணீர் குடிக்கக் கூடாது. விக்கிக் கொள்கிறது அதனால்தான் தண்ணீர் குடிக்கிறோம் என்றும் சிலர் கூறுவதுண்டு. இவ்வாறு விக்கிக் கொள்கிறது என்றால் நாம் சாப்பிடும் முறை தவறு என்றுதான் அர்த்தம்.சாப்பிடும்போது நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும்போது விக்கல் எடுக்காது. அதை மீறியும் விக்கல் வந்தால் கொஞ்சமாக தண்ணீர் குடித்துக் கொள்ளலாம்.மேலும் நம்மில் சிலருக்கு உணவு உண்ட பின் அதிக அளவு தண்ணீரை குடிக்கும் பழக்கம் இருக்கும். இவ்வாறு குடிப்பதும் தவறுதான். மருத்துவ அறிக்கையின்படி உண்ட உணவு ஜீரணமாவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமாவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் சுரக்கும். இவ்வாறு தேவையில்லாமல் உணவு உண்ணும்போது தண்ணீர் குடித்தால் அமிலத்தின் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும்.இது தொடர்ச்சியாக தொடரும்போது உடல் பருமன் பிரச்சனை, செரிமான பிரச்சனை, வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும்.உணவு உண்ட 45-60 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது.