தமிழ் சினிமாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘உதயன்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ்.
அதன்பின்னர், சூர்யாவுடன் மாஸ், கார்த்தியுடன், சகுனி உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினாக நடித்து கவனம் பெற்றார். கடைசியாக, அதர்வா முரளியுடன் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்தவர், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், பிரணிதா சுபாஷ் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபரான நிதின் ராஜுவை நேற்று திடீரென திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து, எந்த தகவலையும் தெரிவிக்காமல் இருந்தார் பிரணிதா.
ஆனால், உறவினர்கள் நண்பர்கள் மூலம் திருமணப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் நடந்ததை உறுதி செய்து தற்போது பதிவிட்டுள்ள பிரணிதா, ”கொரோனா பரவலின் இரண்டாவது அலை அதிகரித்துள்ளதால், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே எங்கள் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
அதனால், அனைவரையும் அழைக்க முடியாததற்கு மன்னிக்கவும்” என்று வருத்தமுடன் கூறியுள்ளார். இது காதல் திருமணம் என கூறிவருகின்றனர்.