LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில் தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
![](https://paarvaionline.com/wp-content/uploads/2024/03/Rainbowluvlgbt-1663310740715-copy-1024x512.jpg)
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில் தன்பாலின திருமண மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், LGBTQ சமூகத்திற்கான திருமண சமத்துவத்தை அங்கீகரிக்கும் தென்கிழக்கு ஆசியாவின் முதல் நாடு என்ற சிறப்பை தாய்லாந்து பெறும். இந்த மசோதாவிற்கு, நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஆதரவாக 399 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் பதிவாயின.
இருப்பினும், சட்ட அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், அரசு கெசட்டில் வெளியிடுவதற்கும் முன்பு செனட்டின் ஒப்புதலை பெற வேண்டும். பாராளுமன்ற அமர்வின் போது, ஒரு பிரதிநிதி, LGBTQ உரிமைகளுக்கான ஆதரவைக் குறிக்கும் வகையில், ஒரு பெரிய வானவில் வண்ண கொடியை அறைக்குள் ஏந்திச் சென்றார்.
ஆசியாவில், தைவான் மற்றும் நேபாளம் மட்டுமே தன்பாலின திருமணத்தை முறையாக அங்கீகரித்துள்ளன. அதே நேரத்தில் இந்தியாவில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தன்பாலின திருமணங்களுக்கான சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்றும். இது தொடர்பான முடிவை நாடாளுமன்றம் தான் எடுக்க வேண்டும் எனக் கூறியது.
சர்வதேச LGBTQ சமூகத்தின் வரவேற்கத்தக்க இடமாக தாய்லாந்து புகழ் பெற்றிருந்தாலும், உள்ளூர் சமூக ஆர்வலர்கள் நீண்டகாலமாக வேரூன்றிய பழமைவாத உணர்வுகளுடன் போராடி வருகின்றனர். முன்மொழியப்பட்ட சட்டம் பாலின-நடுநிலை விதிமுறைகளை பின்பற்றும் திருமண சட்டத்திற்குள் மாற்றம் செய்வதை குறிப்பிட்டுள்ளது. சட்டத்தில் உள்ள “ஆண்கள்,” “பெண்கள்,” “கணவன்கள்,” மற்றும் “மனைவிகள்” போன்ற பாலின சார்ந்த வார்த்தைகள் தொடர்பான குறிப்புகளை நீக்குமாறும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த மசோதா LGBTQ தம்பதிகளுக்கு பரம்பரை மற்றும் தத்தெடுப்பு உரிமைகளை வழங்குகிறது.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் LGBTQ அமைப்பினர் தங்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்த முதல் நாடாக உள்ளது நெதர்லாந்து. அந்நாட்டில் 2001ம் ஆண்டு தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாடாக 2003 ஆம் ஆண்டில் பெல்ஜியம் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.
![](https://paarvaionline.com/wp-content/uploads/2024/03/lo-1024x768.jpg)
2003ம் ஆண்டு முதல் தன்பாலின திருமணத்திற்கு கனடா, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும், 2006ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலும், 2009ம் ஆண்டில் நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளிலும், 2010ம் ஆண்டில் போர்ச்சுகல், ஐஸ்லாந்து, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளிகும் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.
2012 ஆம் ஆண்டில் டென்மார்க்கிலும், 2013 ஆம் ஆண்டில் பிரேசில், பிரான்ஸ், உருகுவே, நியூஸிலாந்து ஆலிய நாடுகளிலும், 2014 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளிலும் தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்பட்டது.
அமெரிக்கா அயர்லாந்து ஆகிய நாடுகளில் 2015ம் ஆண்டிலும், 2016 ஆம் ஆண்டில் கிரீன்லாந்து, கொலம்பியா, ஆகிய நாடுகளிலும், 2017ஆம் ஆண்டில் பின்லாந்து ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மால்டா ஆகிய நாடுகளில் சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
2019ம் ஆண்டில் ஆஸ்திரியா, ஈகுவடார், தைவான் ஆகிய நாடுகளிலும், 2020ம் ஆண்டில் கோஸ்டாரிகாவிலும், 2022 ஆம் ஆண்டில் சிலி, கியூபா, ஸ்விட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளிலும் 2023ம் ஆண்டில் அன்டோர்ரா நாட்டிலும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.