பிப்ரவரி 6 கி.பி. 60 – ஞாயிற்றுக்கிழமை என்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்நாள்தான் வரலாற்றுப் பதிவுகளில் காணக்கிடைக்கிற, வாரத்தின் நாளுக்கான கிழமையோடு பதிவு செய்யப்பட்டுள்ள மிகப்பழைய நாளாகும்.

சூரியன் மறையும் நேரத்தின்படியான கணக்கீட்டில் ஞாயிற்றுக்கிழமையாகக் குறிப்பிடப்பட்டுள்ள இது, சூரிய உதய நேரத்தின்படியான கணக்கீட்டில் புதன்கிழமையாக இருக்கும். அதனால், தற்போது நாம் பயன்படுத்தும் நாட்காட்டியின்படி இது புதன்கிழமையாகும்.
இந்நாளைத் தொடர்ந்து வாரத்தின் 7 நாட்களும் தற்போது நாம் பயன்படுத்திவருகிற பெயரிலான கிழமைகளில் குறிப்பிடப்படுகின்றன. இந்த 7 நாள் கொண்ட வாரம் என்பது, ஜூலியன், கிரிகோரியன் என்று நாட்காட்டிகள் மாற்றம் வந்தபோதும், சுமார் 2000 ஆண்டுகளாக மாறாமல் தொடர்கிறது.
ஆனால், பழங்காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாரத்திற்கு 4 முதல் 10 நாட்கள் வரை கணக்கிடப்பட்டுள்ளன. கிறித்துவுக்குமுன் பண்டைய ரோமாபுரியில் பயன்படுத்தப்பட்ட செல்டிக் நாட்காட்டியில் வாரத்துக்கு 8 நாட்கள். வெல்ஷ், பால்டிக் மொழிகளில் வாரத்துக்கு 9 நாட்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
பண்டைய சீன, எகிப்திய நாட்காட்டிகள் மட்டுமின்றி, ஃப்ரெஞ்சுப் புரட்சிக்குப்பின் உருவான ஃப்ரெஞ்சுக் குடியரசு நாட்காட்டியும் வாரத்துக்கு 10 நாட்களைக் கொண்டிருந்தன. மேற்கு ஆஃப்ரிக்காவின் அகான் நாட்காட்டி வாரத்திற்கு 6 நாட்களையும், ஐஸ்லாந்து, கொரியா, ஜாவா ஆகிய நாடுகள் வாரத்திற்கு 5 நாட்களையும், நைஜீரியாவின் இக்போ நாட்காட்டி வாரத்திற்கு 4 நாட்களையும் கொண்டிருந்தன.
ஸ்பெயினில் காணப்படுகிற கிபுஸ்கோன் பாஸ்க் என்ற மொழியில் வாரத்திற்கு 3 நாட்கள் இருந்ததாகக் குறிப்புக்கள் உள்ளன. கி.மு.45இல் ஜூலியன் நாட்காட்டிக்கு ரோமப்பேரரசு மாறியபோதே 7 நாள் வாரத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. வாரத்தின் நாட்களுக்கு, அக்காலத்தில் அறியப்பட்டிருந்த (சூரியன், சந்திரன் உட்பட) 7 கோள்களின் பெயர்கள், அகஸ்டஸ் சீசர் காலத்தில் சூட்டப்பட்டன.
கோள்களை அடிப்படையாகக் கொண்ட நேரக்கணக்கீட்டை கி.மு.2ஆம் நூற்றாண்டின் ஹெலனிய வானவியலே அறிமுகப்படுத்திவிட்டது.