கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு செல்லும் கனேடியர்கள் மீண்டும் கனடா திரும்பும்போது, அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலே அமெரிக்கா கனடாவுக்கிடையான எல்லை மூடப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைவோர், தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும் என்றும், அவர்கள் கனடாவுக்குள் நுழைந்ததும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் கனடா அறிவித்திருந்தது.
ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குள் செல்வோர், கனடாவிலோ அல்லது அமெரிக்காவிலோ உள்ள ஒரு மருத்துவரிடமிருந்து கடிதம் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தால், அவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சில அமெரிக்க மாகாணங்கள் அமெரிக்காவுக்குள் வரும் கனேடிய ட்ரக் சாரதிகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அளிக்கின்றன.
அதை பயன்படுத்திக்கொண்டு, சில கனேடியர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்காவுக்கு சென்று வருகின்றனர். அப்படி அமெரிக்கவுக்குள் செல்பவர்களை அனுமதிப்பது அமெரிக்க எல்லை அதிகாரிகள் கையில்தான் உள்ளது என கனடா கூறிவிட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், இனி கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழையும் கனேடியர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டார்கள்.
ஆக, தடுப்பூசி போடுவதற்காக அமெரிக்காவுக்குள் செல்வது அத்தியாவசிய மருத்துவக் காரணமாக கருதப்படாது என்று கூறியுள்ள கனேடிய அதிகாரிகள், அப்படி மீறி சென்றுவிட்டு கனடா திரும்புபவர்களுக்கு, அதிகபட்சமாக 750,000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது அத்துடன் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்கள்.