கோவிட் தொற்றினால் நெருக்கடியை சந்தித்திருக்கின்ற ஸ்ரீலங்காவில் எதிர்வரும் நாட்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாமென அமெரிக்கப் பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவித்தலிலேயே இந்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் கோவிட் தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், தமது நாட்டுப் பிரஜைகளுக்கு ஸ்ரீலங்காவுக்கு செல்வதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்ளும்படி அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்றைய தினம் ஸ்ரீலங்காவுக்கான புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் தொடரும் கோவிட் -19 தீரவ நிலைமைகள் காரணமாக ஸ்ரீலங்காவிற்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தமது குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் கோவிட் -19 காரணமாக அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், ஸ்ரீலங்காவிற்கான நான்காம் நிலை பயண சுகாதார அறிவிப்பை தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றது.
இதேவேளை, அமெரிக்காவினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தலில், ஸ்ரீலங்காவில் கோவிட் நெருக்கடியிடையே தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹோட்டல்கள், போக்குவரத்து நிலையங்கள், சுற்றுலாப் பயணிகள் ஒன்றுதிரளும் இடங்கள், பல்பொருள் சந்தைகள், விமான நிலையங்கள், கலாசார உற்வச நிகழ்வுகள், கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களை இலக்குவைத்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என அந்த எச்சரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீலங்காவில் தூர இடங்களில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள், பிரச்சினைகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.