சென்னை அமேசான் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் ஒளிபரப்பாக உள்ள, ‘தி பேமிலி மேன் – 2’ தொடரை தடை செய்யும்படி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
தி பேமிலி மேன் – 2′ என்ற, ஹிந்தி தொடரின் முன்னோட்டம், ஈழத் தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும், இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.
தமிழ் பண்பாட்டை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளை கொண்ட தொடரை, எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளை கொண்டது எனக் கருத முடியாது. தமிழ் பேசும் நடிகையான சமந்தாவை, பயங்கரவாதியாக காட்சிப்படுத்தி உள்ளது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடி தாக்குதல்.
இதுபோன்ற விஷமத்தனமான பரப்புரையை, யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. இந்த தொடரின் முன்னோட்டம், ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே, பெரும் எதிர்ப்பை உண்டாக்கி உள்ளது.
இத்தொடரானது, ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது, தமிழக தமிழர்களின் உணர்வுகளையும், பெருமளவில் புண்படுத்தி உள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேணுவது கடினமாகும்.
அமேசான் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை, தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.