கனேடிய கிராமம் ஒன்றில் இரவில் பற்றிய தீயில் ஏராளம் கால்நடைகள் கருகி பலியான சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு 7.30 மணியளவில் Ottawa பகுதியில் அமைந்துள்ள Manotick என்னும் கிராமத்தில் ஒரு மாட்டுக் கொட்டகையில் திடீரென தீப்பற்றியுள்ளது.
அந்த கொட்டகைக்கு அருகிலேயே உணவு தானியங்கள் சேமித்துவைக்கும் களஞ்சியங்களும் அமைந்துள்ளன. தகவல் அறிந்து அங்கு விரைந்த Ottawa தீயணைப்புப் படையினர், அந்த தீ மேலும் அருகிலுள்ள கட்டிடங்களுக்குப் பரவுவதற்குமுன் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.
தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர்கள், இரவு 9 மணியளவில் தீ இன்னமும் பயங்கரமாக எரிந்துகொண்டிருப்பதாகவும், இரவு முழுவதும் போராடவேண்டியிருக்கும் என்றும் தெரிவித்திருந்தனர்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக 9.30 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தீ எப்படி பற்றியது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தீயில் மனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், 80க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்துள்ளதால் சோகமான ஒரு சூழல் உருவாகியுள்ளது.