திருமணம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும், அதில் நடைபெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றியும், நாம் இதுவரை விரிவாக பார்த்தோம். இனி திருமணத்தில் மணமக்களின் ஜாதகத்தின் முக்கியத்துவம் யாது என்றும், அதன் விவரங்களை பற்றியும் நாம் காண்போம்.முதலில் ஜாதகம் யாதென்று நாம் உணர்ந்து கொண்டால் மட்டுமே அந்த ஜாதகத்தின் முக்கியத்துவத்தையும் நம்மால் அறிந்துக்கொள்ள இயலும். ஏனெனில் ஒரு பொருளின் முக்கியத்துவம் அறியாமல் அப்பொருளை பற்றி நாம் படிப்பதும், உணர்வதும் என்பது இயலாத காரியமாகும்.நமது முன்னோர்கள் நமது வாழ்க்கையில் நிகழும் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் விதத்தில் நமக்கு உரைத்து சென்ற சில சூட்சம வழிகளில் ஒன்று ஜாதகம் ஆகும்.
ஜாதகம் என்பது இந்த அண்ட சராசரங்களிலும் இருக்கக்கூடிய நட்சத்திரங்களையும், கிரகங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டவைகளாகும். யுகங்களும், காலங்களும் மாறினாலும் நட்சத்திரங்களிலும், கிரகங்களிலும் எவ்வித மாற்றங்களும் இருப்பதில்லை. அதன் பண்புகளும் மாறுவதில்லை. இதன் அடிப்படையிலேயே நமது முன்னோர்கள் நமது ஒவ்வொருவரின் குணநலன்களையும், பண்புகளையும் இந்த ஜாதகத்தின் மூலமாக வெளிக்கொணர்ந்தனர்.அதாவது நமது முன்னோர்கள் நம்மை சுற்றியுள்ள இந்த கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நம்மைப் கட்டுப்படுத்துகின்றன என்ற உண்மையை உணர்ந்து கொண்டனர். அதன் பின்னர் அதன் பலன்களை அனைவரும் அனுபவிக்கும் வகையில் அனைவரும் எந்தக் காலக்கட்டத்திலும் புரிந்து கொள்ளும் விதமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த ஜாதகம் ஆகும்.நம்மைச் சுற்றி பல கிரகங்கள் இருந்தாலும் அதில் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கத்திற்கு ஒருவர் ஆளாகும் பட்சத்தில் அந்த கிரகத்தின் தாக்கம் அவரை விட்டு விலகும் காலம் வரை அவர் அதனடிப்படையில் இருக்கின்றார் என்பதை உணர்ந்து அதை குறிக்கும் வகையில் திசா புத்திகளையும் உருவாக்கினார்கள்.நவகிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட பண்புகள் மற்றும் எண்ணங்கள் என வகுத்து அதனடிப்படையில் அந்த கிரகங்களை ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் அடைவு செய்தனர். கிரகங்களின் பண்புகளில் எவ்வித மாற்றங்களும் இன்றைய காலக்கட்டங்கள் வரை நிகழ்வதில்லை. ஆனால் கிரகங்கள் பெயர்ச்சி அடையும் தொலைவுகளில் மட்டுமே மாற்றம் நிகழ்ந்து கொண்டு வருகின்றன. இந்தப் பெயர்ச்சியின் தொலைவுகளை கொண்டே நமது பஞ்சாங்கம் கணிக்கப்படுகின்றது. பஞ்சாங்கம் என்பது அறிவியல் சார்ந்த கிரக நகர்வுகளை துல்லியமாகக் கணிக்கக்கூடிய ஒன்றாகும்.ஒருவரின் ஜாதகம் என்பது எவ்விதம் கணிக்கப்படுகின்றது என்ற கேள்வி அனைவரிடத்திலும் உருவாக்கக்கூடியதாகும். ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் இருக்கக்கூடிய நட்சத்திரமும், கிரக அமைப்புகளுமே அந்தக் குழந்தையின் ஜாதகமாக கருதப்படுகின்றது. அதில் உள்ள கிரகங்களின் அமைப்புகள், நட்சத்திரங்களின் அடிப்படையில் அந்த குழந்தையின் வாழ்க்கையானது நிர்ணயம் செய்யப்படுகின்றது.நாம் வாழும் வாழ்க்கை என்பது நாம் செய்த வினைகளின் அடிப்படையிலேயே என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு நேரத்தில் ஒரு குழந்தை மட்டுமல்லாது பல குழந்தைகள் பிறக்கின்றன. அதில் சிலர் மட்டுமே வெற்றி அடைகின்றனர் சில குழந்தைகள் தோல்வி அடைகின்றனர். இதில் அனைவருக்கும் ஒரு ஜாதகமே என்பதை நாம் அறிவோம். ஆனால், அவர்கள் செய்த வினைகள் என்ன என்பதை யாரும் சிந்திப்பதில்லை. ஆகவே, ஒருவர் செய்யும் வினையே அவரின் பிறப்பையும், முன்னேற்றத்தையும் நிர்ணயிக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு இருக்கையில் மனிதராய் பிறந்த அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு புதிய திருப்பம் என்பது ஒவ்வொருவரின் திருமண வாழ்க்கையில் நிகழ்கின்றது. திருமண வாழ்க்கையில் சிலருக்கு நெருக்கமானவர்களும், சிலருக்கு அறிமுகம் இல்லாத புதிய நண்பர்களுடனும் இணைந்து வாழ்க்கை வாழ வேண்டும் என்ற சூழல் உருவாகக்கூடும். நெருக்கமானவர்கள் பற்றிய விபரங்கள் நாம் எளிமையாக அறிந்துக்கொள்ள இயலும். ஆனால், புதிய நபர்களுடன் இணைந்து வாழும் போது அவர்கள் பற்றிய விபரங்கள் அறிந்துக்கொள்வது என்பது சற்று கடினமான ஒன்றாகும்.அதற்காக நமது முன்னோர்கள் நமது தலைமுறையினர் நன்முறையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நமக்கு அளித்துச் சென்ற ஒரு வரப்பிரசாதம் ஜாதகம் ஆகும். ஒவ்வொரு ஜாதகத்தின் அடிப்படையில் அவர்களின் குணநலன்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கையில் நிகழக்கூடிய நிகழ்வுகளையும் மிகச் சிறந்ததொரு முறையில் துல்லியமாக காட்டக்கூடிய சிறந்ததொரு காலக்கண்ணாடி ஆகும்.இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்ற பேச்சு ஆரம்பித்தவுடனே பெற்றோர்கள் மணமக்களின் இருவர் ஜாதகத்தையும் கொண்டு முதலில் பார்க்கப்படுவது நட்சத்திர பொருத்தம் ஆகும். நட்சத்திரப் பொருத்தம் என்பது மணமக்களின் ஜெனன கால நட்சத்திரமும், ஜெனன ராசியும் கொண்டு பார்க்கப்படும் பொருத்தம் ஆகும்.இந்த நட்சத்திர பொருத்தம் சில இடங்களில் பத்து பொருத்தங்கள் என்றும் சில இடங்களில் 11 மற்றும் 12 பொருத்தங்கள் என்ற வகையிலும் பார்க்கப்படுகின்றன. இந்த பொருத்தங்களின் அடிப்படையில் மணமகன் மற்றும் மணமகளின் திருமண வாழ்க்கை பற்றிச் சிறிதளவே தெரிந்துகொள்ள இயலும்.