சவுதி அரேபியா வரலாற்றில் முதன்முறையாக தூதர் பதவிக்கு பெண் ஒருவரை அரசு நியமித்துள்ளது. பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாகன ஓட்டும் உரிமை சமீபத்தில் சவுதி அரேபியா அளிக்கப்பட்டது. இருப்பினும், பொது இடங்களில் பெண்கள் பழகுவதற்கென விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் அமுலில் உள்ளன.
இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவுக்கான புதிய தூதராக இளவரசி ரிமா பிண்ட் பாண்டர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான தூதராக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் இளைய சகோதரர் காலித் பின் சல்மான் இருந்தார். தற்போது அவர் நாட்டின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்குப் பின்னர் அமெரிக்கா – சவுதி இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவுக்கான சவுதி தூதராக பதவி வகிக்கும் சவுதி இளவரசர் காலித் பின் சல்மான் இணைத்துப் பேசப்படுவதால் இந்த புதிய நியமனத்துக்கு சவுதி அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள இளவரசி ரீமாவின் தந்தை சவுதி அரேபியா நாட்டு உளவுத்துறையின் முன்னாள் தலைவராக பணியாற்றியதுடன், அமெரிக்காவுக்கான சவுதி தூதராக 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக பதவி வகித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் தங்கி படித்த இளவரசி ரீமா சவுதி அரேபியாவில் செய்துவரும் சில பொதுச்சேவைகளால் அந்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.