முன்னுரிமை பட்டியலை மீறும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன உறுப்பினர்களின் உறவினர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டமையை கண்டித்து கிராம சேவையாளர் சம்மேளனம் இன்று இரவு முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிக்கார இதனை அறிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கமும் தமது போராட்டத்தில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் முதல் மற்றும் இரண்டாவது கோவிட் அலைகளின் போது, கிராம சேவையாளர்கள் இரவும் பகலும் சிறப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது கிராம சேவையாளர் ஒருவரும் கோவிட் தொற்றினால் மரணமானார். மேலும் பல அதிகாரிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே தமது நிலைமையைக் கருத்தில் கொண்டு தமக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தபோதும் அதற்கு சாதகமான பதில்கள் இல்லை என்று சுமித் கொடிக்கார குறிப்பிட்டார்.
இருப்பினும், பெரும்பாலான அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ,அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனமும் இந்த விடயத்தில் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளது.
எனவே, நாடு முழுவதும் மொத்தம் 12,000 கிராம சேவையாளர்கள்; தங்களது அனைத்து கடமைகளிலிருந்தும் விலகியிருக்க முடிவெடுத்துள்ளதாக கிராம சேவையாளர் சம்மேளன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த மோசமான நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.