கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா தொடங்கியது.

இதற்காக நாசா, “crew 2” என்ற திட்டத்தை கொண்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதே இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி கடந்த மே மாதம், நாசா விண்வெளி வீரர்களான பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லியை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பினார்கள். அந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அவர்களின் ஆராய்ச்சியை முடித்துவிட்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் பூமிக்கு திரும்பி வந்தார்கள். இந்த பயணம், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பெரிய வெற்றியை தந்த நிலையில் நாசா, அடுத்த 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டனர்.

அதன்படி மீண்டும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் “பால்கன் 9” ரக ராக்கெட்டில் அனுப்ப திட்டமிட்டிருந்தனர். மேலும், அவர்கள் “டிராகன் கேப்சூல்” மூலம் திரும்பி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த பயணத்திற்கு ஜப்பானை சேர்ந்த அகிஹிகோ ஹோஷைட் என்பவரும், நாசா விண்வெளி வீரர்களான ஷேன் கிம்பரோ, கே. மேகன் மெக்ஆர்தர் மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த அகிஹிகோ ஹோஷைட் உள்ளிட்ட 4 வீரர்கள் இந்த டிராகன் கேப்சூலில் பயணிக்கவுள்ளனர்.
இவர்களுக்கான பயிற்சியை நாசா வழங்கியது. குறித்த ராக்கெட், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று விண்ணில் பாயவிருந்த நிலையில், சூழ்நிலை சாதகமாக இல்லாததால் அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10-க்கு புறப்பட்டும் என்று நாசா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அந்த ராக்கெட், சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று, அங்கு ஆய்வுகளை முடித்த பின் வீரர்கள் பூமிக்கு திரும்பி வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.