இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை.
அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிறிதரன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவசர அவசரமாக இக்கூட்டம் கட்சி யாப்பு விதிகளுக்கு முரணாகக் கூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளாத பெரும்பான்மையில்லாத சிறு கூட்டமாக அது நடந்து முடிந்துள்ளது.
கட்சி விதிகளுக்கு முரணாக முடிவுகளை எடுத்ததோடு அதை அவசர அவசரமாக கட்சியின் பேச்சாளராக இருக்கும் சுமந்திரன் ஊடகங்களுக்கு பின்வரும் செய்தியை அறிவித்த அவலமும் நடந்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசா அவர்களை தமிழரசுக் கட்சி ஆதரிப்பதாகவும்,தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரனை தாம் ஆதரிக்கவில்லை என்றும்,பா. அரியநேத்திரன் ஜனாதிபதி வேட்பாளர் நிலையிலிருந்து விலகவேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும், தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு நேற்று வெளியாகியிருந்தது.
சுமந்திரனும் சாணக்கியனும் ஆரம்பத்தில் இருந்து எதற்காக இத்தனை பரபரப்பாகவும் மனதை நிறைத்த பதட்டத்தை காட்டிக் கொள்ளாமலும் ஒரு அக்கப்போரை
ஊர் ஊராக நடத்தி வந்தார்கள் என்பதை தமிழரசுக்கட்சியின் தலைமையும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களும், அறிந்து கொண்டனர்.
அதேபோல் அதன் தொண்டர்களும், ஆதரவாளர்களும் இன்று தெளிவுக்கு வந்துள்ளனர்.
இன்று தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு வடக்குக் கிழக்கில் கட்சி வேறுபாடுகளின்றி பெருகிவருவதும் அதில் தமிழரசுக் கட்சியின், முக்கிய தலைவர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் கணிசமாக களத்தில் இறங்கி செயற்பட்டு வருவதையும் அனைவரும் அறிவர்.
சுமந்திரன் – சாணக்கியன் போன்றோர் தமிழினத்தின் நன்மைக்காக தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார்கள் என இனிமேலும் தமிழரசுக்கட்சி நம்பினால் தந்தை செல்வா அன்று கூறியதுபோல் கடவுள்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனவும், கட்சியின் களைகளை கண்டறிய தமிழ்ப் பொதுவேட்பாளர்
தமிழரசுக்கட்சிக்கு உதவியிருப்பதாக மக்கள் பேசிக்கொள்வதையும் பரவலாகக் கேட்க முடிகிறது.