எதிர்கட்சிகளுக்குள் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது என்று கிண்டல் அடித்துள்ளார் பிரதமர் மோடி.
திரிபுரா மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி என்னை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்குள் ஒலிம்பிக் போட்டி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார்.
அருணாச்சலப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மோடி திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலா வந்தடைந்தார். மகாராஜா பிர் பிக்ரம் கிஷோர் மானிக்யா பஹதூரின் முழு உருவச்சிலையை திறந்து வைத்த அவர், இங்கிருந்தவாறு கார்ஜீ-பெலோனியா இடையிலான புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மிகப்பெரிய ‘கள்ளத்தொடர்பு அணி’ என்று குறிப்பிட்டார். கைகளை கோர்த்தவாறு புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுப்பதற்காக இந்த ‘கள்ளத்தொடர்பு அணி’ தலைவர்கள் கொல்கத்தாவிலும் டெல்லியிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
தனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்வதும், தனிப்பட்ட முறையில் தன்னை தாக்கிப்பேசி வருவதும்தான் இந்த கூட்டணியில் இருப்பவர்களின் முக்கிய வேலையாக உள்ளது. என்னை வீழ்த்துவதற்காக அவர்களுக்குள் ஒரு ஒலிம்பிக் போட்டியே நடப்பதாக தெரிகிறது. மக்களிடம் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு என்ன கதி ஏற்படும்? என்பதை வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு எல்லாம் உணர்த்தத்தான் போகிறது எனவும் மோடி தெரிவித்தார்.
திரிபுராவில் கடந்த 11 மாதங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மக்களுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. மேலும் 1.25 லட்சம் வீடுகளில் கழிப்பிட வசதியும் செய்து தரப்பட்டுள்ளது என்பதையும் தனது பேச்சினிடையே அவர் சுட்டிக்காட்டினார்.