ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியது. மூன்று மாதத்திற்குள் முடிவு எடுக்க பி.சி.சி.ஐ.இக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013ல் நடந்த ஐ.பி.எல்., தொடரில் ‘ஸ்பாட் பிக்சிங்கில்’ ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டேலா, சவான் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. இந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் போதிய ஆதாரம் இல்லாததால் இவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால், வாழ்நாள் தடையை நீக்க பி.சி.சி.ஐ., மறுத்துவிட்டது. இதை எதிர்த்து ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடுத்தார்.
நேற்று, இதற்கான தீர்ப்பை நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் அளித்தனர். அதில்,‘ ஸ்ரீசாந்திற்கு அளிக்கப்பட்ட வாழ்நாள் தடை அதிகமான தண்டனை. இதை நீக்க வேண்டும். இது குறித்து அடுத்த மூன்று மாதத்திற்குள் பி.சி.சி.ஐ., ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவு எடுக்க வேண்டும்,’ எனஇ தெரிவித்தனர்.
பயஸ் வழியில்…
ஸ்ரீசாந்த் கூறுகையில்,‘‘ நான் கிரிக்கெட் விளையாடி ஆறு ஆண்டு ஆகிவிட்டன. தற்போது, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பிற்கு பி.சி.சி.ஐ., மதிப்பு வழங்கும் என நம்புகிறேன். மீண்டும் கிரிக்கெட் களத்தில் பங்கேற்பேன். இனி எங்கு விளையாட விரும்புகிறேனோ, அந்த இடத்தில் விளையாட முடியும். இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் கோப்பை வென்றார். எனக்கு 36 வயதுதான் ஆகிறது. இன்னும் விளையாட வேண்டிய காலம் அதிகமாக உள்ளது. ஸ்காட்லாந்தில் மீண்டும் கிளப் அணிக்காக பங்கேற்க விரும்புகிறேன்,’’ என்றார்.
பி.சி.சி.ஐ., முடிவு என்ன
பி.சி.சி.ஐ., நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறுகையில்,‘‘ சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை. இதன்பின், ஸ்ரீசாந்த விவகாரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்,’’ என்றார். வீரர்களுக்கான ஊக்கமருந்து சோதனை திட்டம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் வரும் 18ல் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் ஸ்ரீசாந்த் தீர்ப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் எனத்தெரிகிறது.