கனடாவுக்கு வரும் பயணிகள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுக்கும் நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தொகை நாளை முதல் எக்கச்சக்கமாக அதிகரிக்க உள்ளது.
கனடாவுக்கு விமானம் வாயிலாக வரும் பயணிகள் கொரோனா சோதனைக்கு உட்பட மறுத்தாலோ, ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுத்தாலோ, அவர்களுக்கு தற்போது 3,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை முதல் அந்த அபராதத்தொகை 2,000 டொலர்கள் உயர்ந்து, 5,000 டொலர்களாக ஆக்கப்பட இருக்கிறது.
கனடாவுக்கு விமானம் வாயிலாக வரும் அனைத்துப் பயணிகளும் கனடாவுக்குள் வந்ததும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றும், 14 நாட்கள் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய நிலையில், கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வரும் வரையில் அரசு நியமித்துள்ள ஹொட்டல் ஒன்றில் மூன்று நாட்களுக்கு அவர்கள் தங்கவேண்டும் என்றும், அதற்கான கட்டணமான 2,000 டொலர்களை தாங்களே செலுத்தவேண்டும் என்றும் பிப்ரவரி 22ஆம் திகதி கனடா அரசு அறிவித்தது.
அத்துடன், கனடாவுக்கு வருவதற்கு முன்பும் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.
ஆனால், பல பயணிகள், 3,000 டொலர்கள் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு ஹொட்டல்களில் தங்களைத் தனிமைப்படுத்தாமலே சென்றுவிடுவதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே, இந்த ஹொட்டல் தனிமைப்படுத்தலே தேவையில்லை என்றும், மக்களே தங்கள் தனிமைப்படுத்துதலை ஏற்பாடு செய்துகொள்ளட்டும் என்றும் அரசின் ஆலோசனைக் குழு பிரச்சினை எழுப்பியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
ஏப்ரல் 14க்கும் மே 24க்கும் இடையில் மட்டும், 1,000க்கும் அதிகமான பயணிகள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு மறுத்ததால் அபராதம் செலுத்தியுள்ளார்கள். 400க்கும் அதிகமான பயணிகள் கனடாவுக்கு வருவதற்கு முன்னும், விமான நிலையம் வந்த உடனும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாததற்காக அபராதம் செலுத்தியுள்ளார்கள் என கனடா அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.