சபதம் எடுத்தல் :

தன் கணவனை கண்ட கண்ணகிக்கு கோபம் துளி கூட மாறவும் இல்லை, குறையவும் இல்லை. என்னை தனியே இங்கே இருக்க விட்டு சென்ற என் கணவனை அடைவது எனக்கு மிக மிக எளிது. ஆனால் அவரை அடைவதற்கு முன்னால் என் கோபம் தணிய வேண்டும்.
தீமை செய்த அரசனை கேள்வி கேட்பேன். வழக்காடுவேன். தீர விசாரிக்காமல் ஒருவனை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அந்தக் குற்றவாளிக்கு கூட தன்னுடைய நிலைமையை விளக்க ஒரு வாய்ப்பு தராமல் அவனை கொலை செய்யும் அளவு தீர்ப்பு வழங்கிய, அந்த கொலைகார வேந்தனை பழி தீர்ப்பேன். அவனை அழிப்பேன். இந்நகரை ஒழிப்பேன் என்று கூறி சினம் கொண்டவளாக எழுந்தவள்.
எழுந்தவள் தன்னுடைய பழைய கனவு ஒன்றினை நினைத்து பார்த்தாள். அன்று கண்ட தீய கனவு ஒன்று இன்று நடந்து விட்டது. அதை நினைக்க, நினைக்க நிலை குழைந்து போனாள். நெடும் கண்ணீர் விட்டாள்.
எண்ணிப் பார்த்தால் இனியும் பொறுத்தல் என்பது ஆகாது என்று முடிவு செய்தவள், விழி நீரை துடைத்துக் கொண்டு அவன் அவலத்தைப் போக்க ஆவேசம் கொண்டவளாக, நேராக அரண்மனையை நோக்கி தீராத சினத்தோடு நடந்தாள்.
தீய சொப்பனம் :
இதே நேரத்தில் பாண்டியனின் மனைவியான கோப்பெருந்தேவி மிகுந்த கலக்கத்தோடு இருந்தாள். ஒருவித பதட்டத்தோடும் தென்பட்டாள்.
எப்பொழுதும் இல்லாத ஒரு வித வாட்டமும், பதட்டமும் தன் தேவியிடத்தில் இருப்பது கண்ட அவளுடைய தோழி, அவளிடத்தில் என்ன ஆயிற்று அரசியே? ஏன் உங்கள் முகம் இவ்வளவு சோகமாக இருக்கிறது? எதையோ காணாத ஒன்றை கண்டது போல பதட்டத்தோடு இருக்கின்றீர்களே.. என்பது போல விசாரித்தாள்.
ஆமாம். காணாத ஒன்றை கண்டேன். அதுவும் கனவில். எண்ணிப் பார்க்க அது மிகவும் பயங்கரமாகவும், கொடூரமாகவும் இருந்தது என்றாள் அரசி.
இதைக் கேட்ட தோழி என்ன தேவி, கனவிலும் நினைக்க முடியாத ஒரு வாழ்வினை நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். யாருக்கும் கிடைக்காதல்லவா இந்த சந்தோஷமான வாழ்க்கை. நீங்கள் கனவை கண்டு பயப்படுவதா? உங்களை பயப்படுத்தும் அளவில் கனவில் என்னதான் நிகழ்ந்தது? என்பது போல வினாவினாள்.
தன் தோழி இடத்தில் அரசனின் செங்கோலும், அவனுடைய வெண்கொற்றக்குடையும் சாய்கின்றன. அரண்மனை வாயிலில் இருக்கக்கூடிய ஆராய்ச்சி மணி ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. எட்டு திசைகளிலும் அசைவுகள் ஏற்பட்டு அதிர்கின்றன. சூரியனே இல்லாத ஒரு பகல் பொழுது, இருள் நிறைந்த இருளில் வானவில் தோன்றுகிறது. நட்சத்திரங்கள் எல்லாம் பகலில் வருகின்றன இதற்கு என்ன பொருள்? என்பது தான் புரியவில்லையே என்று கலக்கத்தோடு கூறினாள்.
அரசனை காணுதல் :
இதைக் கேட்டதும் தோழியும் சற்று அச்சம் கொண்டவள் போல நீங்கள் அரசரிடமே இதைக் கூறுங்கள் என்றாள்.
ஆமாம்… உடனே அரசரிடம் சொல்லியாக வேண்டும் என்று கூறியவள் அரசவை நோக்கி அவளுடைய அந்தப்புரத்து பரிவார பணிப்பெண்கள் சூழ்ந்து வர கோப்பெருந்தேவி அரசன் உடைய அவையை அடைந்தாள்.
அப்பொழுது பாண்டியன் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். திடீரென்று கோப்பெருந்தேவி வருகை என்னவென்று புரியாமல் சிறிது யோசனையில் இருந்தான். அவன் அருகில் வந்த தேவி அவனிடத்தில் தான் கண்ட தீக்கனவை எடுத்துக் கூறினாள் கோப்பெருந்தேவி.
கோப்பெருந்தேவி கூறியதை பொறுமையுடன் கேட்ட பாண்டியன், தேவி கூறி முடித்ததும் சிரித்துக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த தேவி, நான் என்ன சிரிக்கும் வகையில் ஏதாவது கூறினேனா? ஏன் இப்படி சிரிக்கின்றீர்கள்? நான் என் கனவை பற்றி கூறினேன்.
கனவும் வாழ்க்கையும் :
பாண்டிய மன்னனோ.. தேவியை பார்த்து, நடப்பது எல்லாம் கனவின் மூலமாக தெரிந்து கொண்டால் நம் வாழ்க்கை மீது நமக்கே ஈடுபாடு என்பது இல்லாமல் போய்விடும். வாழ்க்கையின் மீது ஈடுபாடுகள் சிறிதும் இல்லை என்றால் நாம் மரணத்திற்கும் அச்சம் கொள்ள மாட்டோம். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயம் என்பது நாளை நடப்பது என்ன என்பது தெரியாமல் இருப்பது தான். அதை அனைவரும் அறிந்தால் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது என்றார்.
அப்படியானால் என் கனவுக்கு என்னதான் அர்த்தம்? என்றாள் தேவி.
நீ கண்ட கனவிற்கு எந்த ஒரு பொருளும் இல்லை, அதற்கு அர்த்தமும் கிடையாது. கனவு என்பது நம் அடி மனதில் இருக்கும் அச்சமும் அந்த அச்சத்தினால் ஏற்படக்கூடிய நிராசைகளுமே கனவுகளாக நமக்கு வெளிப்படுகின்றன என்று தன் மனைவிக்கு விளக்கமாக கூறினார் பாண்டிய மன்னன்.
நடக்க இருப்பது என்ன என்று தெரியாமல் சகுனங்களும், நிமித்தங்களும் கூறியதை புரிந்து கொள்ளாமல் மன்னனும் கூறினான்.
இவர்கள் இருவரும் இவ்விடம் பேசிக் கொண்டிருந்த பொழுது கண்ணகி அரண்மனையின் வாயிலை வந்தடைந்தாள். மிகுந்த கோபத்தோடு வாயில் காவலில் இருந்த காவலனிடம் சீறிப் பாய்ந்தாள்.
முப்பெரும் தேவி வருதல் :
வாயில் காப்பவனே.. அறிவிழந்து நெறி தவறிய அரசனை பாதுகாக்கும் காவலனே.. மதி இழந்த உன் அரசனிடம் சென்று சொல்வாயாக, கையில் ஒற்றை சிலம்பை ஏந்தி, கற்றை குழலாள் ஒருத்தி கணவனை இழந்து வாசல் கடையில் நிற்கின்றாள் என்று அறிவிப்பாயாக என்று ஆணையும் இட்டாள்.
திடீரென்று தன்னிடத்திலே ஆணையிடுகின்றாளே, அரசனைத் தவிர மற்றவர் ஆணையை செவி சாய்க்காத காவலன், அப்பொழுது தான் அவளை நேரில் பார்த்தான். திடுக்கிட்டு நின்றான் அவளது தோற்றத்தை கண்டு. அவளுடைய தலைவிரி கோலம் அவனைத் தடுமாற வைத்ததோடு மட்டுமல்லாமல், அவள் இட்ட ஆணையை நிறைவேற்றவும் செய்தது. அச்சம் கொண்டவன் தட்டு தடுமாறி அரண்மனையில் அரசர் வீற்றிருக்கும் இடத்திற்கு சென்றான்.
தோற்றமும், அச்சமும் :
அரசனைக் கண்டதும் வாயிற் காவலன், அரசே கணவனை இழந்த பெண்ணொருத்தி உங்களை காண வந்திருக்கின்றாள். பார்பதற்கு அவள் பெண்ணாக தோன்றவில்லை. கொற்றவை பத்ரகாளி மற்றும் தாருகனின் மார்பை பிளந்த துர்க்கை என அனைவரும் இணைந்து வந்தது போல மிகுந்த கோபத்தோடும், சினம் கொண்ட நெஞ்சோடும் வந்திருக்கின்றாள் கையில் ஒற்றை சிலம்பை ஏந்தி என்று ஒரு வித நடுக்கத்துடனே கூறினான்.
அரசனின் முன்னிலையில் அரசனைத் தவிர வேறு எவரையும் வர்ணிப்பதில்லை. வர்ணித்தாள் அதற்கு கிடைக்கும் தண்டனைகள் அதிகம் என்பதை நன்கு அறிந்தவன் காவலன். ஆனால் அவனே, அதனை மறந்து வர்ணித்துக் கூறும் அளவில் அவளுடைய தோற்றமும், கோபமும் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட பாண்டிய மன்னன், வாயிற் காவலனிடம் எந்தவித கோபமும் கொள்ளாமல் வரச்சொல் அந்த பெண்ணை என்றான்.
அச்சத்துடன் வாயிற் காவலனும் சினத்தோடு நின்று கொண்டிருந்த கண்ணகியை, அரசனை காண உள்ளே விட்டான். நொடிப் பொழுதில் புயல் போல அரசனை காண வந்தாள்.
காரணம் அறிதல் :
அவளை கண்டதும் முகத்தில் இருந்த கோபமும், விழிகளில் இருக்கும் கண்ணீருக்குமான காரணத்தை அறிய விழைந்தான்.
கண்ணகியின் தோற்றத்தையும், அவள் கொண்டிருந்த சினத்தையும் கண்டு அரசியும் ஒரு நொடி மனம் கலங்கினாள் அவளையும் அறியாமல்.
இள நங்கையே நீ யார்? கண்ணீரோடு கலங்கி நிற்பது ஏன்? என்று வினவினான்.
கண்ணகி யார் என்பதை சொல்ல துவங்கியதுமே அவையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.




